முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உப்பள தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ. 5,000 நிவாரணம் வழங்கும் திட்டம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

வெள்ளிக்கிழமை, 12 ஆகஸ்ட் 2022      தமிழகம்
CM-3 2022-08-12

Source: provided

சென்னை  சென்னை தலைமைச்செயலகத்தில், உப்பு உற்பத்தி இல்லாத அக்டோபர் முதல் டிசம்பர் மாதங்களில் உப்பளத் தொழிலாளர் குடும்பங்களுக்கு ஆண்டொன்றுக்கு ரூ. 5,000/- நிவாரணத் தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கும் அடையாளமாக 5 தொழிலாளர்களுக்கு நிவாரணத் தொகைக்கான காசோலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார். மேலும், தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் சார்பில் நெய்தல் உப்பு என்ற புதிய வணிகப் பெயரில் வெளிச்சந்தையில் உப்பு விற்பனையினை தொடங்கி வைத்தார். 

2021-22ஆம் ஆண்டிற்கான தொழில்துறை மானியக் கோரிக்கையில், மழைக்காலங்களில் உப்பு உற்பத்திப் பணிகள் பாதிக்கப்படும் நேரத்தில் உப்பளத் தொழிலாளர்கள் மாற்றுப் பணி ஏதுமின்றி வருவாய் இல்லாமல் சிரமத்தை சந்திக்கிறார்கள்.  எனவே, அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் உதவி செய்யும் பொருட்டு தமிழ்நாடு உடல் உழைப்புத் தொழிலாளர் சமூக பாதுகாப்பு நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.5,000/- நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பின்படி, உப்பு உற்பத்தி இல்லாத அக்டோபர் முதல் டிசம்பர் மாதங்களில் உப்பளத் தொழிலாளர் குடும்பங்களுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.5,000/- நிவாரணத் தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கும் அடையாளமாக 5 தொழிலாளர்களுக்கு நிவாரணத் தொகைக்கான காசோலைகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். இதன்மூலம் உப்பளத் தொழிலில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள். 

மேலும் 2021-22 ஆம் ஆண்டிற்கான தொழில்துறை மானியக் கோரிக்கையில், பொதுமக்கள் பயன்பெறும் பொருட்டு, தமிழ்நாடு உப்புக் கழகம் அயோடின் கலந்த கல் உப்பு மற்றும் அயோடின் கலந்த சுத்திகரிக்கப்பட்ட தூள் உப்பு ஆகியவற்றை நெய்தல் உப்பு என்ற புதிய வணிகப் பெயரில் வெளிச்சந்தையில் விற்பனை செய்யும் என்று அறிவிக்கப்பட்டது.  

அதன்படி, முதல்வர், நெய்தல் உப்பு என்ற புதிய வணிகப் பெயரில் அயோடின் கலந்த கல் உப்பு மற்றும் அயோடின் கலந்த சுத்திகரிக்கப்பட்ட தூள் உப்பு ஆகியவற்றை பொதுமக்கள் பயன்பெறும் பொருட்டு நியாயமான விலையில் வெளிச்சந்தையில் விற்பனையை தொடங்கி வைத்தார். 

இந்நிகழ்வின் போது, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சி.வி.கணேசன், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தலைமைச்செயலாளர் இறையன்பு, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன், தொழிலாளர் ஆணையர் / முதன்மைச் செயலாளர் டாக்டர் அதுல் ஆனந்த், தமிழ்நாடு உப்பு நிறுவன மேலாண்மை இயக்குநர் இராசாமணி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து