முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெள்ள தடுப்பு பணிகளை துரிதமாக மேற்கொள்ளுங்கள் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை

வெள்ளிக்கிழமை, 30 செப்டம்பர் 2022      தமிழகம்
OPS 2022-07-26

Source: provided

சென்னை : வடகிழக்கு பருவமழைக் காலத்தின்போது தொடர்ந்து மழைப்பொழிவு ஏற்பட்டால் நிலைமை என்னவாகுமோ என்ற அச்சத்தில் மக்கள் உறைந்து போயுள்ளனர். எனவே வெள்ளத்தடுப்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் அரசு மேற்கொள்ள வேண்டும் என்று முதல்வருக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். 

இது குறித்து ஓ.பன்னீர் செல்வம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 

வடகிழக்கு பருவமழை முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பேசிய முதல்வர், வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்படக் கூடிய மாவட்டங்களில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நிறைவேற்றப்படுவதாகவும், முக்கியக் கால்வாய்களில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும் இந்த ஆண்டு மழை நீர் தேங்காது என்று ஓரளவு எதிர்பார்ப்பதாகவும் கூறி இருந்தார். 

முதல்வர் ஓரளவு என்று சொல்வது இந்த ஆண்டும் மழை நீர் தேங்குமோ என்ற சந்தேகம் பொதுமக்களிடையே ஏற்பட்டு உள்ளது. இந்தச் சூழ்நிலையில், கடந்த புதனன்று பெய்த ஒரு மணி நேர மழையில் சென்னை மாநகரமே வெள்ளத்தில் மூழ்கியது. மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலுள்ள பேருந்து நிலையங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். ஆனால், அதற்கான பணிகள் இன்னமும் துவங்கப்படவில்லை. 

இந்த நிலையில் வடகிழக்கு பருவமழைக் காலத்தின்போது தொடர்ந்து மழைப்பொழிவு ஏற்பட்டால் நிலைமை என்னவாகுமோ என்ற அச்சத்தில் மக்கள் உறைந்து போயுள்ளனர். எனவே, முதல்வர் இதில் உடனடியாக தனிக்கவனம் செலுத்தி, வெள்ளத் தடுப்புப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளவும், பருவமழையின் போது, ஆங்காங்கே தோண்டப்பட்டு இருக்கும் பள்ளங்களை சுற்றி வைக்கப்பட்டு இருக்கும் தடுப்புகளை கண்காணிக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து