முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி குடியரசு தின விழாவில் 17 மாநில அலங்கார ஊர்திகள் பங்கேற்பு: பெண்கள் மேம்பாட்டை பறைசாற்றிய 'தமிழ்நாடு ஊர்தி'

வியாழக்கிழமை, 26 ஜனவரி 2023      இந்தியா
Delhi 2023 01 26

டெல்லியில் நேற்று நடைபெற்ற குடியரசு தின விழாவில் 17 மாநில அலங்கார ஊர்திகள் பங்கேற்று அணிவகுத்தன. இதில் தமிழ்நாட்டில் இருந்து இடம்பெற்ற ஊர்தி பெண்கள் மேம்பாட்டை பறைசாற்றுவதாக அமைந்தது.

நாட்டின் 74வது குடியரசு தின விழா நேற்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாப்பட்டது. தலைநகர் டெல்லியில் நடந்த விழாவில் ஜனாதிபதி திரெளபதி முர்மு, பிரதமர் மோடி பங்கேற்றனர். எகிப்து அதிபர் அப்தெல் பட்டா எல் சிசி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இதற்கு முன்பாக, டெல்லியில் உள்ள போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து, கடமைப்பாதையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசிய கொடியை ஏற்றினார். அவர் ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு நடைபெறும் முதல் குடியரசு தின விழா இதுவாகும். அவர் கொடியேற்றிய போது, தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

ஜனாதிபதி திரவுபதி முர்மு மூவர்ண கொடியை ஏற்றிய பிறகு அணி வகுப்பு காலை 10.30 மணிக்கு தொடங்கியது. கடமைப் பாதையில் ஜனாதிபதி மாளிகை அருகே தொடங்கிய அணிவகுப்பு விஜய் சவுக், இந்தியா கேட், செங்கோட்டை வரை நடைபெற்றது.

ராணுவ பிரிவில் முப்படைகளுடன் குதிரை படை மட்டுமின்றி ஒட்டக படையும் இடம் பெற்றது. கடற்படையில் 144 இளம் மாலுமிகள் பங்கேற்றனர். முதல் முறையாக 3 பெண் அதிகாரிகளும், 6 அக்னி வீரர்களும் கலந்து கொண்டது சிறப்பாகும். விமான படையில் 4 அதிகாரிகளுடன் 148 வீரர்கள் அணிவகுத்தனர். 148 தேசிய மாணவர் படையினரும், 448 நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்களும் கலந்து கொண்டனர். அணி வகுப்பில் எகிப்து நாட்டு படை பிரிவும் பங்கேற்றது.

மாநிலங்கள் மற்றும் மத்திய அரசின் அமைச்சகங்கள், துறைகளின் அலங்கார அணிவகுப்பு, குழந்தைகளின் கலாசார நிகழ்ச்சிகள், மோட்டார் சைக்கிள் சாகசங்கள் உள்ளிட்டவையும் இடம் பெற்றன. அணி வகுப்பில் தமிழ்நாடு உள்ளிட்ட 17 மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் பங்கேற்றன. 6 துறைகளின் அலங்கார ஊர்திகளும் கலந்து கொண்டன. நாடு முழுவதும் இருந்து 500க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இதில், தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தியில், சமூக வளர்ச்சி, மேம்பாட்டில் பெண்களின் பங்களிப்பை விளக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தியில், ஒளவையார், வேலுநாச்சியார் உருவங்கள் அலங்கார ஊர்தியின் முகப்பு பக்கத்தில் இடம்பெற்றிருந்தன. மேலும் இந்த ஊர்தியில், பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமி, பரத நாட்டிய கலைஞர் பால சரஸ்வதி, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, மூவலூர் ராமாமிர்த அம்மையார் உருவங்கங்கள் இடம்பெற்றன. சங்க காலம் முதல் தற்காலம் வரை பெண்களின் மேம்பாட்டை பறைசாற்றும் விதமாக தமிழ்நாடு ஊர்தி இடம்பெற்றிருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து