முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேலத்தில் மதிப்பிழந்த 500, 1000 ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தவர் கைது

வெள்ளிக்கிழமை, 24 மே 2024      தமிழகம்
Jail

Source: provided

சேலம்: சேலத்தில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக வந்த புகாரின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், மதிப்பிழப்பு செய்யப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் மாசிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சபீர் என்பவர் வீட்டில் கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கோகுலநாதன் என்பவர் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் நேற்று முன்தினம் சபீர் வீட்டிற்கு சென்ற போலீஸார் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சோதனையில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. ஆனால் சபீர் வீட்டில் கடந்த 2016ம் ஆண்டு பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் கட்டு கட்டாக வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

அவற்றை எண்ணியதில், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பழைய செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்த போலீஸார் விசாரணைக்காக சபீரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். மேலும் கோகுலநாதனையும் அழைத்து சென்று போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

போலீஸாரின் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. சபீர், பாலாஜி மற்றும் கோகுலநாதன் ஆகியோர் கூட்டாக சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளனர். கடந்த 2016ம் ஆண்டு பண மதிப்பிழப்பு செய்யப்பட்டபோது, இவர்களிடம் ஒரு கோடி ரூபாய் அளவிற்கு 1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் இருந்துள்ளது. இதனை மாற்றி கொடுப்பதாக சபீர் தனது பங்குதாரர்களிடம் கூறி செல்லாத நோட்டுகளை வாங்கி இருக்கிறார்.

ஆனால் ஆண்டுகள் பல கடந்தும் ரூபாய் நோட்டுகளை, சபீர் மாற்றி கொடுக்கவில்லை. பணத்தை கொடுத்தவர்களில் பாலாஜி என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். பல ஆண்டுகள் ஆகியும் பணத்தை திருப்பி கொடுக்காதது குறித்து சபீரிடம் கோகுலநாதன் கேட்டுள்ளார். அப்போது பணம் தன்னிடம் அப்படியே இருப்பதாகவும், இதனை மாற்றுவதற்காக முயற்சி செய்த வகையில் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அந்த பணத்தை கொடுத்து விட்டு ரூபாய் நோட்டுகளை எடுத்துச் செல்லுமாறு சபீர் கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த கோகுலநாதன், சபீர் வீட்டில், கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக அம்மாபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார், மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளை பதுக்கி வைத்திருந்ததாக சபீரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து