முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொதுநுழைவுத் தேர்வுக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு

வியாழக்கிழமை, 23 பெப்ரவரி 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,பிப்.23 - மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பில் சேர பொது நுழைவுத்தேர்வு முறை கொண்டுவரும் மத்திய அரசின் திட்டத்திற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஒரு காலத்தில் மருத்தும் மற்றும் பொறியியல் படிப்புகளில் சேர வேண்டும் என்றால் கடும் விதிமுறைகள் பின்பற்றப்பட்டன. இதனால் பெரும்பாலும் உயர்ஜாதி வகுப்பை சேர்ந்த மாணவ, மாணவிகள் மட்டுமே சேர்ந்து படித்து வந்தனர். உயர்கல்வி எல்லோருக்கும் குறிப்பாக கிராமப்புற மாணவர்களுக்கு கிடைக்கும் வகையில் மருத்துவம், பொறியியல் படிப்புகளில் இடஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனால் கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல் போன்ற தொழில் கல்வியில் சேர்ந்து படிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. மேலும் இந்த படிப்புகளில் பிளஸ் 2 வகுப்பில் வாங்கும் மார்க்கு அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்தநிலையில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் சேர நாடு முழுவதும் ஒரே மாதிரியான பொதுநுழைவுத்தேர்வு நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து கேட்கும் கூட்டம் நேற்று புதுடெல்லியில் நடைபெற்றது. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் மாநில கல்வி அமைச்சர்கள் கலந்துகொண்டு தங்களுடைய கருத்துக்களை தெரிவித்தனர். 

தமிழகம் சார்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன், பள்ளித்துறை அமைச்சர் சிவபதி ஆகியோர் கலந்துகொண்டு தமிழக அரசின் கருத்தை தெரிவித்தனர். அப்போது மருத்துவம், பொறியியல் படிப்பில் சேர நாடு முழுவதும் ஒரே மாதிரியான பொதுநுழைவுத்தேர்வு நடத்த கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பொதுநழைவுத்தேர்வு நடத்தினால் கிராமப்புறங்களில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு போதுமான வாய்ப்பு கிடைக்காது என்றனர். ஏற்கனவே தொழில் படிப்புகளில் பிளஸ்2 மார்க் அடிப்படையில்தான் இடஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. அதனால் பொது நுழைவுத்தேர்வு தேவையற்றது என்றும் அவர்கள் கூறினர். தமிழக அரசின் இந்த கருத்துக்கு பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கல்வி அமைச்சர்கள் ஆதரவாக பேசியதாக தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்