முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் - ஜெயலலிதா கண்டனம்

புதன்கிழமை, 13 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.13 - இனி துப்பாக்கிச்சூடு நடத்த அனுமதிக்க மாட்டோம் என்று சோனியா உறுதியளித்த மறுநாளே மீனவர் கொல்லப்படுவது, இவர்கள் புளுகு சில நாட்கள்தான் என்று தெரிகிறது என்று ஜெயலலிதா கூறியுள்ளார். மீனவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.    

சென்னையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில், தமிழக மீனவர்கள் மீது இனி துப்பாக்கிச் சூடு நடத்தாமல் பார்த்துக் கொள்வோம் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி உறுதி அளித்த மறு நாளே தமிழக மீனவர் ஒருவர் மரணமடைந்து இருக்கிறார் என்ற செய்தியைப் பார்க்கும் போது, கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளில் தெரியும்  என்ற பழமொழி தான் நினைவிற்கு வருகிறது. 2.4.2011 அன்று ராமேஸ்வரத்திலிருந்து கடலில் மீன்பிடிக்கச் சென்ற விக்டர்ஸ், மாரிமுத்து, அந்தோணிராஜ் மற்றும் ஜான்பால் ஆகிய நான்கு மீனவர்கள் ஊர் திரும்பாத சூழ்நிலையில், அண்மையில்  விக்டர்ஸ் மற்றும் அந்தோணிராஜ் ஆகியோரது உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்ற செய்தியையும், மற்ற இரண்டு மீனவர்களின் கதி என்னவென்று தெரியவில்லை என்ற செய்தியையும் கேட்டு நான் ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்துள்ளேன்.  

இந்தச் செயல் இலங்கை கடற்படையினரின் சதிச் செயலாக இருக்குமோ என்ற சந்தேகம் தற்போது மீனவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. எனவே, வழக்கம் போல கடிதம் எழுதி காலத்தைக் கடத்தாமல், கரை திரும்பாத மீதமுள்ள இரண்டு மீனவர்களின் உயிருக்கும், உடைமைக்கும் எவ்வித ஆபத்துமின்றி அவர்களை பாதுகாப்பாக மீட்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசையும், மைனாரிட்டி தி.மு.க. அரசையும் கேட்டுக் கொள்கிறேன். இறந்து போன தமிழக மீனவர்கள்  விக்டர்ஸ் மற்றும் அந்தோணிராஜ் ஆகியோரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, மரணமடைந்தோர்களது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்