முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை போர்க்குற்றம் பற்றிய மேலும் ஒரு ஆவணப்படம்

செவ்வாய்க்கிழமை, 19 பெப்ரவரி 2013      உலகம்
Image Unavailable

 

கொழும்பு, பிப்.20 - பிரபாகரன் இளைய மகனை சுட்டுக்கொல்வதற்கு முன்பாக இலங்கை ராணுவம் சிறை வைத்திருந்ததை சானல்4 ஆதாரத்துடன் தெரிவித்துள்ளது. இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் ராணுவத்திற்கும் இடையே கடந்த 2009ம் ஆண்டு மே மாதம் இறுதிக்கட்டபோர் நடந்தது. அதில் பிரபாகரன் கொல்லப்பட்டார். அவரது மனைவி, மூத்தமகன், மகள், இளையமகன் பாலசந்திரன் ஆகியோர் குடும்பத்துடன் படுகொலை செய்யப்பட்டனர். இறுதிக்கட்டப்போரின் போது 1லட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் குண்டுவீசி கொல்லப்பட்டனர். பிடித்துச்செல்லப்பட்ட  விடுதலைப்புலிகள் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டனர். இலங்கை ராணுவத்தின் கொடூர தாண்டவங்களை தொகுத்து இங்கிலாந்தின் சானல்4 என்ற டிவி ஆவணப்படமாக தயாரித்து வெளியிட்டது. இது உலகம் முழுவதும் மக்களை பதைபதைப்பில் ஆழ்த்தியது. இலங்கை ராணுவத்தின் போர்க்குற்றங்களை அந்நாட்டு அரசு ஏற்க மறுத்தது. கிராபிக்ஸ் செய்து மிகைப்படுத்தி காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியது. இறுதிக்கட்டப்போர் முடிவின் போது பிரபாகரனின் இளையமகன் 12 வயது பாலச்சந்திரன் சுட்டுக்கொல்லப்பட்ட படம் வெளியாகியிருந்தது. ஆனால் அவன் எப்படி இறந்தான் என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் அவனை பிணைக்கைதியாக பிடித்துச்சென்ற இலங்கை ராணுவம் ஈவு இரக்கமின்றி 5 தடவை மார்பில் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றது என்பது தெரியவந்துள்ளது. அதற்கான போட்டோக்களை ஆதரத்துடன் சானல்4 டிவி வெளியிட்டது. 

பிணைக்கைதியாகும் முன்பு பாலச்சந்திரனுக்கு 5 விடுதலைப்புலிகள் காவலாக இருந்துள்ளனர். பாலச்சந்திரனுடன் சேர்த்து அவர்களையும் இலங்கை ராணுவம் பிடித்துச் சென்றது. பின்னர் விடுதலைப்புலிகள் 5 பேரின் கைகளை கட்டி தலையில் சுட்டு கொடூரமாக கொன்றுள்ளனர். பின்னர் பாலச்சந்திரனை ராணுவத்தின் கட்டுபாட்டில் உள்ள இடத்தில் மணல் மூட்டைகளுக்கு நடுவில் உட்காரவைத்தனர். சட்டை கூட அணியாமல் லுங்கியைப் போர்த்திய நிலையில் காயங்களுடன் பரிதாபமாக அமர்ந்திருக்கும் பாலச்சந்திரனுக்கு சாப்பிட பிஸ்கட் வாங்கி கொடுத்துள்ளனர். அதைச் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் பாலச்சந்திரனை ராணுவ வீரர்கள் டிஜிட்டல் கேமிராவில் போட்டோ எடுத்துள்ளனர். பின்னர் 2 மணி நேரம் கழித்து பாலச்சந்திரனை கொடூரமாக சுட்டுக்கொன்றனர். அதையும் அதே டிஜிட்டல் கேமிராவில் போட்டோ எடுத்துள்ளனர். பிணமாக கிடக்கும் பாலச்சந்திரனின் மார்பில் 3 துப்பாக்கிக்குண்டுகள் துளைத்துள்ளன. அவனை 2அடி தூரத்திலிருந்து சுட்டுக்கொலை செய்திருப்பார்கள் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர். அதே நேரத்தில் அவரின் பாதுகாவலர்கள் அவரது கண் முன்பாகவே சுட்டுக்கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த போட்டோக்களை வெளியிட்டுள்ள சேனல்4 பிரபாகரன் இளையமகன் பாலச்சந்திரன் கொடூரமாக கொல்லப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் நோ வார் ஷோன் என்ற பெயரில் விரைவில் புதிய ஆவணப்படம் ஒன்றை சேனல்4 வெளியிட உள்ளது. ஏற்கனவே ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை அதிபர் ராஜபக்சே மீது அமெரிக்கா கொண்டு வந்த போர்க்குற்றம் சம்பந்தப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால் இலங்கை அரசு சிக்கலில் உள்ளது. இந்த நிலையில் சேனல்4 தற்போது வெளியிட்டுள்ள பிரபாகரனின் இளையமகன் பாலச்சந்திரனின் போட்டோக்கள் மற்றும் வெளியாக இருக்கும் சேனல்4 ஆவணப்படம் இலங்கைக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் ராஜபக்சேவும் அவரது தம்பியும் ராணுவ மந்திரியுமாமன கோதபய ராஜபக்சேவும் கடும் நெருக்கடிக்கு ஆளாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்