முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பள்ளி மதிய உணவில் பூச்சிக்கொல்லி: தடய அறிவியல் துறை

திங்கட்கிழமை, 22 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

பாட்னா, ஜூலை. 22 - பீகார் பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் பூச்சிக் கொல்லி மருந்து கலந்திருந்ததாக தடய அறிவியல் துறை வல்லுனர்கள் அறிக்கை அளித்துள்ளனர். பீகார் மாநிலம் சரன் மாவட்டத்தில் உள்ள காந்தமான் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 23 குழந்தைகள் உயிரிழந்தனர். மேலும் 24 குழந்தைகளும் சமையலர் மஞ்சுதேவியும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உணவில் விஷம் கலந்திருக்கலாம் என சந்தேகம் வலுத்தது. இது தொடர்பாக ஆய்வு செய்த தடய அறிவியல் துறை வல்லுனர்கள் தங்களின் அறிக்கையை அளித்தனர். 

இந்த அறிக்கை குறித்து கூடுதல் டி.ஜி.பி. ரவீந்தர் குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், உணவை சமைக்க பயன்படுத்தப்பட்டிருந்த எண்ணெயில் மோனோகுரோடபாஸ் கலந்துள்ளது. அதே மருந்து குழந்தைகளின் தட்டில் இருந்த உணவிலும் இருந்தது. விவசாய பணிகளுக்கும் பயன்படுத்தப்படும் பூச்சிக் கொல்லி மருந்தான மோனோகுரோடபாஸ் மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது. உலக தர சான்றின்படி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் எண்ணெயில் பூச்சிக் கொல்லி மருந்து அதிகளவில் கலந்து இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார். 

குழந்தைகள் இறந்த சம்பவத்தை அடுத்து அப்பள்ளியின் தலைமை ஆசிரியை மீனாதேவி தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதற்கிடையே தலைமை ஆசிரியையின் சொத்துக்களை பறிமுதல் செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து மாவட்ட எஸ்.பி. கூறுகையில், மீனாதேவி எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை. தலைமறைவாக உள்ள அவரை வெளியே கொண்டு வருவதற்கு அழுத்தம் அளிக்கும் வகையில் சொத்துக்களை பறிமுதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்