முழு உடற்தகுதியுடன் உள்ளேன் என்றும், ஓய்வு பெறும் பேச்சுக்கே இடமில்லை என்றும் ரோஜர் பெடரர் உறுதிபட தெரிவித்துள்ளார்.
2020 ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட் ஸ்லாம் செமிபைனலில் செர்பிய நம்பர் 1 நோவக் ஜோகோவிச்சிடம் தோற்ற பிறகு டென்னிஸ் பக்கம் பெடரர் வரவில்லை. 20 கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டங்களுடன் ரஃபேல் நடாலுடன் சமனிலை வகிக்கிறார் பெடரர்.
முழங்காலில் இரண்டு அறுவை சிகிச்சை நடந்ததால் 13 மாதங்கள் டென்னிஸை ரோஜர் பெடரரால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. 39 வயதாகும் இந்த மகா டென்னிஸ் நட்சத்திரம் தன் கதை இன்னும் முடிவடையவில்லை, விம்பிள்டனில் முழு உடல் தகுதியுடன் சந்திக்கிறேன் என்று உறுதியாகக் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்.,
“கடந்த சில மாதங்களாக சிறிய போட்டிகளில்தான் ஆடிவருகிறேன். நான் மீண்டும் நல்ல பயிற்சி எடுக்க வேண்டியுள்ளது. வலுவாகவும் உடல் தகுதியுடனும் இன்னும் வேகமாக நகர்தலும் அடங்கிய ஒரு முழுமையான நிலை எய்த வேண்டும் என்று கருதுகிறேன். இதை கணக்கிட்டு பார்த்தால் விம்பிள்டனுக்கு நான் 100% உடல் தகுதியுடன் வருவேன். அப்போது முதல்தான் எனக்கு சீசன் தொடங்குகிறது. அதுவரை எல்லாமே “எப்படிப் போகிறது என்று பார்ப்போம்” என்ற நிலையே.
ஓய்வு பெறும் பேச்சுக்கே இடமில்லை. மாதக்கணக்கில் முழங்கால்களில் பிரச்சனை செய்தால் அதைப் பரிசீலிப்பேன். என் கதை இன்னும் முடியவில்லை என்றே கருதுகிறேன். அதாவது டென்னிஸ் ஆட்டத்தை நான் மகிழ்ச்சியுடன் ஆடுகிறேன் என்பதைத் தவிர வேறு எனக்கு எதுவும் இல்லை. பெரிய தொடர்களை வெல்ல வேண்டும் என்பதும் என் எண்ணம்” என்றார் ரோஜர் பெடரர்.