முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு கூடுதல் மனுத் தாக்கல்

செவ்வாய்க்கிழமை, 7 ஜூலை 2015      தமிழகம்
Image Unavailable

புதுடெல்லி: முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் நேற்று தமிழக அரசு கூடுதல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. ஏற்கனவே தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு தொடர்பாக தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சிகள் விமர்சனம் செய்திருந்தன. இதற்கு தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கமளித்து ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் விடுதலைப் புலிகள் மீது தமிழக அரசு எந்த குற்றச்சாட்டையும் சுமத்தவில்லை என்றும், கற்பனையான குற்றச்சாட்டுக்களை கருணாநிதி கட்டவிழ்த்து விடுகிறார் என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருந்தார்.

மேலும் அணையின் பாதுகாப்பு தொடர்பாக கூடுதல் மனு ஒன்றை தாக்கல் செய்யுமாறு முதல்வர் ஜெயலலிதா அறிவுறுத்தி இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார். அதன்படி நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பாக கூடுதல் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.  அதில் மத்திய நுண்ணறிவுப் பிரிவு விடுதலைப் புலிகள் தொடர்பாக தெரிவித்துள்ள கருத்துக்கள் தமிழக அரசுக்கு ஏற்புடையதாக இல்லை. விடுதலைப் புலிகளால் அணையின் பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படும் என்று நுண்ணறிவுப் பிரிவு கூறியுள்ளது. இதை தமிழக அரசு ஏற்கவில்லை என்று அந்த கூடுதல் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே நேற்று, முல்லைப் பெரியாறு அணையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அணையின் நீர்மட்டம், நீர் கசிவு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து அவர்கள் ஆய்வு நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து