முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது: தமிழகத்தில் 94.56 சதவீத மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி : மறுகூட்டல், மறுமதிப்பீடுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் : * தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் 9-ம் தேதி வழங்கப்படும்

திங்கட்கிழமை, 6 மே 2024      தமிழகம்
Plus-2-Exam-Results 2023-05

Source: provided

சென்னை : தமிழகத்தில் நேற்று  வெளியான  பிளஸ் -2 தேர்வு முடிவுகளில் 94.56 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த தேர்வில் திருப்பூர் மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளது. மேலும் மாணவ, மாணவிகளுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வரும் 9-ம் தேதி வழங்கப்படும் என்றும், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் பள்ளி கல்வி தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இந்த தேர்வை சுமார் 7 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதினார்கள். இவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் நேறறு காலை 9.30 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் வெளியிடப்பட்டது.

வழக்கமாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்தான் தேர்வு முடிவுகளை வெளியிடுவார். தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், தேர்வுத்துறை அதிகாரிகள் இந்த ஆண்டு தேர்வு முடிவை வெளியிட்டனர். 

நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வில் மொத்தம் 94.56 சதவீதம் பேர் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 94.03 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 94.56 ஆக அதிகரித்துள்ளது. 

7,60,606 மாணவ, மாணவிகள் எழுதிய பிளஸ் 2 பொதுத் தேர்வில் 7,19,196 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். எப்போதும் போலவே மாணவர்களை விட மாணவியர்களே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி, மாணவர்கள் 92.37 சதவீதமும், மாணவிகள் 96.44 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  

பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்:-  

அரசுப் பள்ளிகளில் 91.32 சதவீதம் பேரும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 95.49 சதவீதம் பேரும்,  தனியார் பள்ளிகளில் 96.7 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  மேலும் இந்த பொதுத்தேர்வில் 397 அரசுப் பள்ளிகளும், 2,478 தனியார் பள்ளிகளும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. 

திருப்பூர் முதலிடம்

பிளஸ்-2 பொதுத்தேர்வில் 97.45 சதவீதம் தேர்ச்சி பெற்று திருப்பூர் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது.  97.42 சதவீதம் தேர்ச்சி பெற்று ஈரோடு, சிவகங்கை மாவட்டங்கள் 2-ம் இடம் பெற்றுள்ளன.  97.25 சதவீதம் தேர்ச்சி பெற்று அரியலூர் மாவட்டம் 3-ம் இடம் பிடித்துள்ளது.   90.47 சதவீதம் தேர்ச்சி பெற்று திருவண்ணாமலை கடைசி இடத்தை பிடித்துள்ளது.

தேர்வு முடிவுகளை மாணவ,மாணவிகளும், பெற்றோரும் www.tnresults.nic.in , www.dge.tn.gov.in  என்ற இணையதளத்தில் மதிப்பெண்ணை பார்க்கலாம் என தேர்வுத்துறை அறிவித்து இருந்தது. மேலும் பள்ளி மாணவர்கள் அவர்கள் படித்த பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டு இருந்த செல்போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது கொடுத்திருந்த செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தியாக தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்பட்டன. 

இதுதவிர, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்கள், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் தேர்வு முடிவுகளை எந்தவித கட்டணமுமின்றி அறிந்து கொள்ளலாம் எனவும், பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.  

தேர்வு முடிவுகளை வெளியிட்ட பின் பள்ளி கல்வி தேர்வுத் துறை இயக்குனர் சேதுராம வர்மா நிருபர்களிடம் கூறியதாவது:-

மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

பிளஸ்-2 தேர்வில் மாணவ, மாணவிகள் இந்த ஆண்டு 94.56 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டை காட்டிலும் இந்த வருடம் தேர்ச்சி விகிதம் அரை சதவீதம் அதிகமாகும். மாணவ, மாணவிகள் தங்களின் மதிப்பெண் விவரங்களை தெரிந்து கொண்ட பின்னர் மறுகூட்டல் அல்லது மறு மதிப்பீடு செய்வதற்கு இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் அல்லது பள்ளிகள் மூலமும் மதிப்பெண் குறைவாக இருப்பதாக கருதினாலோ, விடைத்தாள் நகல் பெறவோ விண்ணப்பிக்கலாம். பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி அடையாதவர்கள் துணைத் தேர்வு எழுதவும் ஏற்பாடு செய்யப்படுகிறது என்று தெரிவித்தார். 

9-ம் தேதி தற்காலிக மதிப்பெண் சான்று

இந்நிலையில், 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வரும் 9-ம் தேதி வழங்கப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.அந்தந்த பள்ளிகளில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து