முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தலைசிறந்த தமிழக விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம்

வெள்ளிக்கிழமை, 23 டிசம்பர் 2016      நீலகிரி

தலைசிறந்த தமிழக விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது தொடர்பாக நீலகிரி மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு_

                        தேசிய அளவு போட்டி

விளையாட்டுத்துறையில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்ற தற்போது நலிந்த நிலையிலுள்ள தமிழகத்தைச் சேர்ந்த தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இத்திட்டத்திற்கு குறைந்த பட்ச தகுதியாக தேசிய அளவு விளையாட்டுப் போட்டிகளில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்றிருக்க வேண்டும். தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். பள்ளி, கல்லூரி காலங்களில் சாதனை படைத்தவர்கள் மட்டுமே தகுதிபெறுவர். அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுச் சங்கங்களினால் நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டிருத்தல் வேண்டும். முதியோருக்கான போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறத்தகுதியில்லை.

                               மாத வருமானம் ரூ.6 ஆயிரம்

2016 ஏப்ரல் முதல் தேதியன்று 58 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரரின் மாத வருமானம் ரூ.6 ஆயிரத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரால் சான்றொப்பமிட்ட விளையாட்டுச் சான்றிதழ் நகல்கள், வருமானச்சான்று நகல், வயது குறித்த சான்று நகல் ஆகியவை கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும். மத்திய அரசின் விளையாட்டு வீரருக்கான ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் மத்திய, மாநில அரசின் கீழ் ஓய்வூதியம் பெறுவோர் இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதியில்லை. ஓய்வூதிய விண்ணப்ப படிவத்தை எச்சூழ்நிலையிலோ, அடிப்படையிலோ, நிராகரிக்கவோ அல்லது தள்ளுபடி செய்யவோ தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கு உரிமை உண்டு.

                            ரூ.10 கட்டணம்

விண்ணப்பங்கள் மாவட்ட விளையாட்டுப் பிரிவு அலுவலகத்தில் கிடைக்கும். விண்ணப்பங்களை ரூ.10 கட்டணமாக செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 30.01.2017 ந் தேதிக்குள் மாவட்ட விளையாட்டுப் பிரிவு அலுவலகத்தில் சேர்க்க வேண்டும். அதற்குப்பின் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. இவ்வாறு மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்