முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாற்றுத் திறனாளிகளின் வாழ்வில் ஒளியேற்றுகிற அரசாக அம்மாவின் அரசு திகழ்கிறது: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பெருமிதம்

வெள்ளிக்கிழமை, 7 செப்டம்பர் 2018      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- மாற்றுத் திறனாளிகளின் வாழ்வில் ஒளியேற்றுகிற அரசாக அம்மாவின் அரசு திகழ்கிறது என மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற மாற்றுத் திறனாளி களுக்கான வாழ்வாதார முகாமில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
மதுரை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை,இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் மற்றும் மத்திய அரசின் நிறுவனமான அலிம்கோ ஆகிவற்றின் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான வாழ்வாதார முகாம் திருமங்கலம் நகர் தேவர்திடல் பகுதியிலுள்ள ரெங்கவிலாஸ் மஹாலில் சிறப்பாக நடைபெற்றது.இந்த முகாமில் மாற்றுத் திறனாளிகளின் உபகரணங்களுக்கான மதிப்பீடு செய்யப்பட்டதுடன் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு மற்றும் தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் பல்துறை நிபுணர்களால் வழங்கப்பட்டது.இந்த முகாமின் மூலமாக தேர்வு செய்யப்படும் மாற்றுத்திறனுடையோருக்கு தேவையான ஊன்று கோல்கள்,செயற்கை கை,கால் உபகரணங்கள்,மூன்று சக்கர நாற்காலிகள் போன்றவை மத்திய அரசின் அலிம்கோ நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டு இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் ஒரு மாதத்திற்குள்ளாக இலவசமாக வழங்கப்படுகிறது.ஏராளமான மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்ட இந்த மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதார முகாமினை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
அப்போது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது: மாற்றுத்திறனாளிகள் அனைவரும் கடவுளின் குழந்தைகள்.மதுரை மாவட்டத்தில் திருமங்கலம் உள்ளிட்ட நான்கு இடங்களில் மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கை தரத்தினை உயர்த்திடும் வகையில் வாழ்வாதார முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.இந்த முகாமில் பங்கேற்றுள்ள மாற்றுத்திறனுடையோருக்கு தேவையான உபகரணங்களுக்கு அளவீடு செய்யப்பட்டு மத்திய அரசின் அலிம்கோ நிறுவனத்தின் மூலம் தயார் செய்யப்பட்டு ஒருமாத காலத்தில் மீண்டும் இங்கே முகாம் நடத்தி உபகரணங்கள் அனைத்தும் வழங்கப் படவுள்ளது.அம்மா அவர்கள் கடவுளின் குழந்தைகளாக உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளார்கள்.மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்குவதற்கான சதவீதத்தை குறைத்து அரசாணை வெளியிட்டவர் அம்மா.முதலில் 60சதவீதம் இருந்தால் தான் 1000 ரூபாய் உதவித்தொகை பெற முடியும் என்ற நிலையை மாற்றி 40சதவீதமாக குறைத்து அனைருக்கும் உதவித்தொகை வழங்கிட அரசாணை வெளியிட்டவர் அம்மாமட்டும் தான்.
அதே போல் வேலைவாய்ப்பு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று பொருளாதாரம் ஒரு அளவுமுறை காரணியாக இல்லாமல் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்கப்படும் என்ற ஆணையை வெளியிட்டது அம்மாவின் அரசு.எனவே அம்மாவுடைய அரசு என்றைக்குமே மாற்றுத் திறனாளிகளுக்கு உற்ற துணையாக இருக்கும்.இங்கு அரசின் மூலமாக மாத்திரம் அல்ல தனியார் துறையின் மூலமாகவும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்காக பயிற்சியுடன் கூடிய முயற்சி இங்கே கொடுக்கப்படுகிறது.மாற்றுத் திறனாளிகளே உங்களின் நம்பிக்கை வீண் போகாது.உங்களின் வாழ்வில் ஒளியேற்றுகிற அரசாக அம்மாவின் அரசு இருக்கிறது.உலகத்தில் நாம் எதை வேண்டுமானாலும் இழக்கலாம். ஆனால் இழக்கக்கூடாத ஒன்று நம்பிக்கை மட்டும் தான்.நம்பிக்கையுடன் செயல்படுவோருக்கு வெற்றி நிச்சயம்.இவ்வாறு அவர் பேசினார்.
இந்த முகாமில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம்,இந்தியன் ஆயில்,அலிம்கோ,டெடி டிரஸ்ட் மற்றும் தனியார் நிறுவனங்களின் அதிகாரிகள்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தர்மராஜ்,உதயகுமார்,மதுரை புறநகர் மாவட்ட கழக துணைச் செயலாளர் அய்யப்பன்,மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் திருப்பதி,திருமங்கலம் நகரச் செயலாளர் ஜே.டி.விஜயன்,முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன் தமிழழகன்,ஒன்றிய கழகச் செயலாளர்கள் அன்பழகன்,மகாலிங்கம்,ராமசாமி,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி,முன்னாள் திருமங்கலம் துணை சேர்மன் சதீஸ்சண்முகம்,கட்சி நிர்வாகிகள் கபிகாசிமாயன்,கண்ணன்,முருகன்,வேல்ராமகிருஷ்ணன்,நெடுமாறன்,பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து