முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலையில் பக்தர்கள் வெள்ளம்: கார்த்திகை முதல்நாளில் 50 ஆயிரம் பேர் தரிசனம் செய்ய திரண்டனர்

ஞாயிற்றுக்கிழமை, 17 நவம்பர் 2019      ஆன்மிகம்
Image Unavailable

சபரிமலை  : சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜைக்காக நேற்று முன்தினம் மாலை திறக்கப்பட்ட நிலையில் சாமி தரிசனத்துக்காக கார்த்திகை முதல்நாளான நேற்று 50 ஆயிரம் பக்தர்கள் வரை குவிந்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜைக்காக நேற்று முன்தினம் மாலை பூஜையுடன் திறக்கப்பட்டது. அதன்பின் 18-ம் படி பூஜை முடிந்து இரவு நடை சாத்தப்பட்டது. நேற்று அதிகாலை புதிய மேல்சாந்தி ஏ.கே.சுதீர் நம்பூதிரி ஐயப்பனுக்குச் சிறப்புப் பூஜை, நெய் அபிஷேகம், மகா கணபதி ஹோமம் ஆகியவற்றைச் செய்து முறைப்படி நடையைத் திறந்து வைத்தார். மலையாள மாதமான விருட்சகம் நேற்று பிறந்ததையொட்டி நடந்த சிறப்புப் பூஜையில் மாநில தேவஸம்போர்டு அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரன், திருவிதாங்கூர் தேவஸம்போர்டு தலைவர் என். வாசு, டி.டி.பி. உறுப்பினர்கள் விஜயகுமார், ரவி, ஆணையர் ஹர்ஸன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சபரிமலை ஐயப்பன் கோயில் நேற்று முன்தினம் திறக்கப்பட்ட நிலையில் டிசம்பர் 27-ம் தேதி மண்டல பூஜைக்காகத் திறந்திருக்கும். அதன்பின் 3 நாட்கள் நடை அடைக்கப்படும். மீண்டும் டிசம்பர் 30-ம் தேதி மகரவிளக்கு பூஜைக்காக ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டு, ஜனவரி 20-ம் தேதிவரை திறந்திருக்கும். சபரிமலையில் கார்த்திகை முதல்நாளான நேற்று தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடக என பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து, இருமுடிகட்டி தரிசனத்துக்காக வந்திருந்தனர். முதல்நாளான நேற்று சன்நிதானத்தில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமலிருந்தது. ஏறக்குறைய 3 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். சிறப்பு பூஜைகள் முடிந்தவுடன், தேவஸம்போர்டு அமைச்சர் சுரேந்திரன், அதிகாரிகளுடனும், தேவஸம்போர்டு உறுப்பினர்களுடன் சன்நிதானத்தில் உள்ள விருந்தினர் இல்லத்தில் அவசர ஆலோசனை நடத்தினார். பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளதா, போலீஸார் பாதுகாப்பு போதுமான அளவில் இருக்கிறதா என்பது குறித்து கேட்டறிந்தார். சபரிமலை சீசனுக்காக போலீஸார் பாதுகாப்பு 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதில் முதல் பிரிவு நேற்று பொறுப்பேற்றுக் கொண்டனர். அதில் 10 போலீஸ் எஸ்.பி.க்கள், 30 ஆய்வாளர்கள், 120 துணை ஆய்வாளர்கள், 1400 தலைமைக் காவலர்கள் ஆகியோர் சன்நிதானத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். இதுதவிர ஆந்திராவில் இருந்து 10 போலீசார், 135 அதிவிரைவு படையினர், தேசிய பேரிடர் மீட்புக்குழுவில் இருந்து 45 பேர் நேற்று சன்னிதானத்தில் உள்ளனர். கடந்த ஆண்டை போல் இல்லாமல் இந்த ஆண்டு பக்தர்களையும், போராட்டக்காரர்களையும் சமாளிக்க 2500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நிலக்கல் பகுதியில் பக்தர்களின் வாகனங்கள் நிறுத்தப்பட்டு அங்கிருந்து அனைத்து பக்தர்களும் அரசு பேருந்து மூலம் பம்பைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். பம்பைக்கு எந்த பக்தர்களின் வாகனமும் அனுமதிக்கப்படவில்லை. நிலக்கல் பகுதியில் இருந்து பம்பைக்கு பக்தர்களை அழைத்துச் செல்ல 816 பேருந்துகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என போலீஸார் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து