முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவின் புதிய தலைமை கணக்கு தணிக்கையாளராக பதவியேற்றார் முர்மு: பிரதமர் மோடி பங்கேற்பு

சனிக்கிழமை, 8 ஆகஸ்ட் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : இந்தியாவின் புதிய தலைமை கணக்கு தணிக்கையாளராக ஜி.சி.முர்மு பதவியேற்றுள்ளார். 

ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்படாத போது, பா.ஜ.க.வைச் சேர்ந்த சத்யபால் மாலிக் கவர்னராக இருந்தார். அதன்பின் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டு ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்தது.

மாநிலம் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீரில் முதல் துணைநிலை கவர்னராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி கிரிஷ் சந்திர முர்மு நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில்,  தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியாக இருந்த ராஜீவ் மெஹ்ரிஷியின் பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து, அந்தப் பதவிக்கு கிரிஷ் சந்திர முர்மு நியமனம் செய்யப்படுவதாக, மத்திய அரசு அறிவித்தது.

இதுகுறித்து பொருளதார விவகாரத்துறை வெளியிட்ட அறிவிப்பில், தலைமைக் கணக்கு தணிக்கை அதிகாரியாக கிரிஷ் சந்திர முர்முவை ஜனாதிபதி நியமித்துள்ளார். அவர் அந்த பதவி ஏற்கும் நாளிலிருந்து இந்த உத்தரவு அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளராக (சி.ஏ.ஜி)  முர்மு பதவியேற்றார். ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடந்த விழாவில் அவர் பதவி ஏற்றுக்கொண்டார். இந்த விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். 

ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்த முர்மு, ஐ.ஏ.எஸ் அதிகாரியாக குஜராத்தில் பணியாற்றினார். குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்த போது அவரின் முதன்மைச் செயலாளராக இருந்தார். இதன் அடிப்படையில் ஜம்மு காஷ்மீர் துணை நிலை கவர்னர் பதவி அவருக்கு வழங்கப்பட்டது.

தற்போது இந்திய அரசின் வரவு செலவுகளை கண்காணித்து, முறைகேடு நடந்தால் அது பற்றி நாடாளுமன்றத்துக்கு தெரிவிக்கும் மிக முக்கியமான அமைப்பான தலைமை கணக்கு தணிக்கையாளர் பதவியில் அவர் அமர்த்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து