முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாலை விரிவாக்க பணிக்காக மரங்களை வெட்டக்கூடாது: நெடுஞ்சாலை துறைக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

வியாழக்கிழமை, 24 செப்டம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

நெடுஞ்சாலை விரிவாக்கப்பணிக்காக வெட்டப்படும் ஒரு மரத்துக்குப் பதில் புதிதாக 10 மரக்கன்றுகள் நட வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை நிறைவேற்ற முடியாவிட்டால் சாலைப் பணிக்காக மரங்களை வெட்ட வேண்டாம் என நெடுஞ்சாலைத்துறையை ஐகோர்ட் கேட்டுக்கொண்டுள்ளது.

விருதுநகரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆனந்தமுருகன், ஐகோர்ட் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், கன்னியாகுமரி முதல் வாரணாசி வரை சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட போது சாலையின் இரு பக்கங்களிலும் நின்றிருந்த 1.78 லட்சம் மரங்கள் வெட்டப்பட்டன.  இதற்குப் பதிலாக விரிவாக்கப்பணி முடிந்ததும் 10 லட்சம் மரக்கன்றுகள் நட்டிருக்க வேண்டும். அதன்படி நெடுஞ்சாலைத்துறை மரங்கள் நடவில்லை.  இது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு விசாரணைக்கு வந்தபோது ஐகோர்ட் உத்தரவுப்படி நெடுஞ்சாலகளில் மரங்கள் நடப்படும் என நெடுஞ்சாலைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகும் மரங்கள் நடப்படவில்லை. எனவே, தேசிய நெடுச்சாலையின் இரு பக்கங்களிலும் மரக்கன்றுகளை நடவும், அவற்றைத் தொடர்ந்து பராமரிக்கவும் நெடுஞ்சாலைத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. நெடுஞ்சாலைத்துறை வழக்கறிஞர் வாதிடுகையில், மரக்கன்றுகளை நடுவது தொடர்பாக வனத்துறையுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மரங்களை நடவும், அவற்றை பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். 

பின்னர் நீதிபதிகள், சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்துள்ளது. பருவமழை 3 மாதம் தாமதமாகவே வருகிறது. இது தொடர்ந்தால் சுற்றுச்சூழல் மேலும் மோசமடையும்.  சாலை மேம்பாட்டுக்கு பணிக்காக ஒரு மரம் வெட்டினால் அதற்கு பதில் 10 மரக்கன்றுகள் நட வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதை பின்பற்றாவிட்டால் சாலை விரிவாக்கத்தின் போது மரங்களை வெட்ட வேண்டாம் என்றனர். 

தொடர்ந்து, சென்னை - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சாலை விரிவாக்கப் பணியின் போது எவ்வளவு மரங்கள் வெட்டப்பட்டன? அதற்கு பதிலாக எவ்வளவு மரங்கள் நடப்பட்டுள்ளன? என்பது குறித்து சென்னை, மதுரை தேசிய நெடுஞ்சாலை ஆணைய இயக்குனர்கள் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, அடுத்த விசாரணையை நவம்பர் மாதம் 5-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து