முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா பரவல்: தமிழகம் உள்ளிட்ட மாநில முதல்வர்களுடன் 16-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை

செவ்வாய்க்கிழமை, 13 ஜூலை 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புது டெல்லி: கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக தமிழகம்,  கேரளா, கர்நாடகா, மகராஷ்டிரா உள்ளிட்ட மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி வரும் 16-ம் தேதி ஆலோசனை நடத்துகிறார்.

நாட்டில் கடந்த பிப்ரவரி முதல் கொரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாக பரவத் தொடங்கியது. பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்து வந்தது.மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக தொற்றுப் பரவல் படிப்படியாக குறைந்தது. அதே நேரத்தில் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணியும் வேகமாக நடந்து வருகிறது. சில மாநிலங்களில் மட்டும் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. கேரளா, மகராஷ்டிரா, அருணாச்சல பிரதேசம், திரிபுரா, மிசோரம், ஒடிசா, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. இதையடுத்து அந்த மாநிலங்களுக்கு மத்தியக் குழுவை மத்திய சுகாதார அமைச்சகம் அனுப்பி வைத்துள்ளது. மாநில அரசுக்கு தேவையான அறிவுரைகள், தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைகளையும் இந்தக் குழுவினர் வழங்கினர்.

இதன் தொடர்ச்சியாக சம்பந்தப்பட்ட மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த முடிவு செய்தார். அதன்படி வடகிழக்கு மாநிலங்களான அசாம், நாகாலாந்து, திரிபுரா, சிக்கிம், மணிப்பூர், மேகாலாயா, அருணாச்சல பிரதேசம், மிசோரம் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நேற்று காலை ஆய்வு செய்தார்.

இதன் தொடர்ச்சியாக தமிழகம், கேரளா, கர்நாடகா, ஒடிசா, மகராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி வரும் 16-ம் தேதி ஆலோசனை நடத்துகிறார்.  அன்று காலை 11.00 மணிக்கு நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சம்பந்தப்பட்ட மாநிலங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து