முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தஞ்சை மாணவி தற்கொலை விவகாரம்: போலீஸ் சூப்பிரண்டு மீது அண்ணாமலை பாய்ச்சல்

சனிக்கிழமை, 22 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, போலீஸ் சூப்பிரண்டின் முடிவுக்கு கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளார்.

அரியலூர் மாவட்டம் வடுகர் பாளையத்தை சேர்ந்த மாணவி லாவண்யா (17). தஞ்சை மாவட்டம் மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். பள்ளி அருகே உள்ள விடுதியில் தங்கி இருந்த லாவண்யா கடுமையான மன உளைச்சல் காரணமாக வி‌ஷம் குடித்தார். தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டிருந்த லாவண்யா சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.

மதம் மாற வற்புறுத்தி தன்னை நெருக்கடிக்கு ஆளாக்கியதாக லாவண்யா கூறும் வீடியோ பதிவு வெளியானது சர்ச்சையை கிளப்பியது. மாணவி மரணம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ஜனதாவினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். 

இதற்கிடையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளி பிரியா மதமாற்றம் தொடர்பான பிரச்சினை ஏதும் நடைபெறவில்லை என்று கூறினார். இது பா.ஜனதாவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, போலீஸ் சூப்பிரண்டின் முடிவுக்கு கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

மாணவி லாவண்யா அளித்துள்ள வாக்குமூல வீடியோ பதிவு தெளிவாக உள்ளது. அப்படியிருந்தும் போலீஸ் சூப்பிரண்டு இந்த முடிவுக்கு வந்தது எப்படி? வீடியோ ஆதாரம் பொய் என்று முடிவுக்கு வந்தாரா? அதை எவ்வாறு உறுதிப்படுத்தினார்? மாணவியின் பெற்றோர், உறவினர்கள் எல்லோரும் தெளிவாக வாக்குமூலம் அளித்தார்கள். அவர்கள் எல்லோரையும் பொய்யர்கள் என்று போலீஸ் சூப்பிரண்டு முடிவு செய்து விட்டாரா? இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து