முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி. 3-வது கட்ட சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது

வெள்ளிக்கிழமை, 18 பெப்ரவரி 2022      அரசியல்
Image Unavailable

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 59 சட்டப்பேரவை தொகுதிகளில் நடைபெறவுள்ள 3-வது கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நேற்று ஓய்ந்தது. நாளை நடைபெறவுள்ள தேர்தலில் கர்ஹால் தொகுதியில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் போட்டியிடுகிறார்.

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர், பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது. இதில் உத்தரகாண்ட், கோவா மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக கடந்த 14-ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. 70 தொகுதிகளை கொண்ட உத்தரகாண்ட்டில் 59.51 சதவீதமும், 40 தொகுதிகளை கொண்ட கோவாவில் 78.55 சதவீதமும் பதிவாகி இருந்தது.

403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச மாநிலத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்டமாக கடந்த 10-ம் தேதி 58 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. 2-வது கட்டமாக 55 தொகுதிகளுக்கு கடந்த 14-ம் தேதி தேர்தல் நடந்தது. இரண்டு கட்டத்திலும் சேர்த்து 61.20 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.

இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் 3-வது கட்ட தேர்தல் நாளை (20-ம் தேதி) நடக்கிறது. கசன்கஞ்ச், இடா, ஹத்ராஸ், பிரோசாபாத், மணிப்பூரி, பரூக்பாத், கணுஞ், எட்டுவா, ஹவ்ரிவா, கான்பூர் தெகத், ஹம்பூரிபூர், ஜலுன், மகோபா, ஜான்சி, லலித்பூர், கான்பூர்நகர் ஆகிய 16 மாவட்டங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது.

இதற்கான பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. இதையொட்டி இந்த தொகுதிகளில் நேற்று தலைவர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர். நாளை நடைபெறும் தேர்தலில் மொத்தம் 627 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 2.15 கோடி மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.  மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ள தொகுதிகளில், கர்ஹால் தொகுதியில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் போட்டியிடுகிறார்.  அவரை எதிர்த்து பாஜக சார்பில் மத்திய மந்திரி எஸ்.பி.சிங் போட்டியிடுகிறார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து