முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமேசுவரத்தில் சிறப்பு யாகம் நடத்தினார் ஆர்.பி.உதயகுமார்

வியாழக்கிழமை, 22 செப்டம்பர் 2022      தமிழகம்
RB-Udayakumar 2022-09-22

Source: provided

ராமேசுவரம்: ராமேசுவரத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சிறப்பு யாகம் நடத்தியுள்ளார்.

அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே தலைமை யுத்தம் உச்சத்தை எட்டியுள்ளது. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வானாலும் தலைமை சர்ச்சை தொடர்வதால் இருவரும் இரு துருவங்களாக செயல்பட்டு வருகிறார்கள். தனித்தனியாக தங்கள் தரப்புக்கு ஆதரவை அதிகரித்து வரும் இருவரும் அ.தி.மு.க.வின் தலைமை பொறுப்பை கைப்பற்ற தொடர்ந்து போட்டா போட்டி நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் அ.தி.மு.க.வில் சட்டமன்ற துணைத் தலைவர் பதவியை பெற்றுள்ள முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரும் குடும்பத்துடன் சென்று ராமேசுவரத்தில் சிறப்பு யாகம் செய்துள்ளார். இதற்காக நேற்று முன்தினம் இரவு ராமேசுவரம் சென்ற அவர் நேற்று அதிகாலை அக்னி தீர்த்த கடல் உள்ளிட்ட 22 புனித தீர்த்தங்களில் குடும்பத்துடன் நீராடினார். இதை தொடர்ந்து ராமநாதசுவாமி கோவிலில் உள்ள பர்வத வர்த்தினி அம்மன் சன்னதியில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினார். பின்னர் ராமேசுவரம் மேல தெருவில் உள்ள தனியார் மண்டபத்தில் குடும்பத்துடன் சேர்ந்து சிறப்பு யாகம் நடத்தினார்.

அப்போது சுமார் 6 மணி நேரம் நடைபெற்ற இந்த சிறப்பு யாக பூஜையில் குடும்ப மேன்மை, தோஷம், முன்னோர்களின் ஆத்மா சாந்தியடைதல் உள்ளிட்ட பரிகார பூஜைகள் செய்யப்பட்டதாக தெரிகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து