முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நக்சல் தாக்குதலில் 7 போலீசார் பலி: 19 ஆண்டுகளுக்கு பிறகு முக்கிய குற்றவாளி கைது

வியாழக்கிழமை, 23 மே 2024      இந்தியா
Jail

பெங்களூரு, காவல் நிலையம் மீது தாக்குதல் நடத்தி 7 பேரை கொன்று துப்பாக்கி, தோட்டாக்களைக் கொள்ளையடித்த வழக்கில் 19 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த நக்சலைட் பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடகா மாநிலம், தும்கூர் மாவட்டம், பாவகடா தாலுகாவின் வெங்கடம்மனஹள்ளியில் உள்ள காவல் நிலையம் மீது கடந்த 2005-ம் ஆண்டு பிப்ரவரி 10-ம் தேதி 300-க்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்தினர். துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டு வீசியும் நக்சலைட்டுகள் இந்த தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதலின் போது பணியில் இருந்த 7 போலீசார் பலியாகினர். மேலும் 5 போலீசார் படுகாயமடைந்தனர்.

இந்த தாக்குதலில் காவல் நிலையம் முன்பாக நின்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஓட்டுநரும் உயிரிழந்தார். திடீரென தாக்குதல் நடத்தியதுடன் காவல் நிலையத்திற்குள் புகுந்து துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை நக்சலைட்டுகள், கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக பாவகடா தாலுகாவில் உள்ள காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 32 பேருக்கு எதிராக பாவகடா ஜேஎம்எஃப்சி நீதிமன்றம், ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்தது. இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில், இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த கோட்டகெரே சங்கர் போலீஸாரிடம் சிக்கினார். பெங்களூரு கவுரிபாளையத்தில் வசித்து வந்த கோட்டகெரே சங்கரை தும்கூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அசோக் தலைமையில் சென்ற போலீசார், கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கோட்டகெரே சங்கர் பெங்களூரு மாநகராட்சியில் (பிபிஎம்பி) ஓட்டுநராக பணிபுரிந்து வந்தது தெரிய வந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து