முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்கா மன்னிப்பு கேட்க வைகோ வலியுறுத்தல்

செவ்வாய்க்கிழமை, 18 செப்டம்பர் 2012      சினிமா
Image Unavailable

 

சென்னை, செப்.18 - இஸ்லாம் மதத்தையும், முகம்மது நபிகள் நாயகத்தையும் இழிவுபடுத்தி எடுக்கப்பட்ட படத்திற்காக அமெரிக்க அரசு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மனித குலம் போற்றுகின்ற நபிகள் நாயகத்தை மிகமிக மோசமாக இழிவுபடுத்தி திரைப்படம் தயாரித்த நக்கோலா பசிலி நக்கோலா என்பவர் அமெரிக்காவில் வசிக்கிறார். குற்றங்கள் செய்ததற்காக சிறையில் இருந்து பரோலில் வந்து இருக்கிறார். தீயிட்டுக் கொளுத்தப்பட வேண்டிய இந்தத் திரைப்படத்தைத் தயாரித்த குழுவினுடைய பெயர் தான், மனதை வாள் கொண்டு பிளக்கிறது. காரணம், அன்பு, கருணை, சகிப்புத் தன்மை, நீதியை உலகத்துக்கு உபதேசித்து, கல்வாரியில் சிலுவையில் அறையப்பட்ட ஏசுநாதரின் பெயரைச் சூட்டிக்கொண்ட, `கிறிஸ்துவுக்கான ஊடகம்' என்று பெயர் சூட்டிக் கொண்ட கொடுமை ஆகும்.

ஆனால் இந்தப் படம் அரசின் வெளியீடு அல்ல என்றும், தனி மனித சுதந்திரத்தில் தலையிட முடியாது என்றும், அமெரிக்க அரசாங்கம் கூறி இருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் அக்கிரமம் ஆகும். இதற்கு அமெரிக்க அரசு பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும்; இப்படத்தைத் தயாரித்த கூட்டத்தைக் கைது செய்து சிறையில் அடைத்துத் தண்டிக்க வேண்டும். இப்படத்தைத் தடை செய்ய வேண்டும். இல்லையேல், இனியும் ஏற்படக் கூடிய விபரீதங்களுக்கு அமெரிக்க அரசே பொறுப்பாளியாக நேரும் என எச்சரிக்கிறேன். இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்