வேதாரண்யம், ஏப்.13 - வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் படகுடன் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் இருவர் நடுக்கடலில் அந்நாட்டு கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் கடந்த மாதம் 25 -ம் தேதி காலையில் யமஹா என்ஜின் பொருத்தப்பட்ட பைபர் படகு ஒன்று கரை ஒதுங்கியது. இந்த படகில் வந்த இலங்கை வெல்வட்டுத்துறை பகுதியைச் சேர்ந்த சிவாஜி மகன் சந்துரு (23), தேவதாஸ் மகன் சுமணன் (30)ஆகிய இரு மீனவர்களை இந்திய பாஸ்போர்ட் சட்டப்படி வேதாரண்யம் போலீசார் கைது செய்து மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர் செய்தனர். பின்னர் இவர்கள் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். விசாரணையில் இம் மீனவர்கள் எரிபொருள் தீர்ந்த நிலையில் திசை தெரியாமல் தமிழக கடற்பகுதிக்கு வந்தது தெரிய வந்ததையடுத்து இம் மீனவர்களை நீதிமன்றம் சில தினங்களுக்கு முன்பு விடுதலை செய்தது. இதைத் தொடர்ந்து மீனவர்கள் இருவரையும் இலங்கைக்கு திருப்பி அனுப்ப அரசு முடிவு செய்தது.
இந்த நிலையில் 19 நாட்களுக்கு பிறகு நேற்று (12-ந்தேதி) காலை 9 மணியளவில் வேதாரண்யம் போலீசாரின் பாதுகாப்பில் இருந்த இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் சந்துரு, சுமணன் ஆகியோரை கோடியக்கரை கப்பற்படை முகாம் அதிகாரிகள். காரைக்கால் கோஸ்ட் கார்டு அதிகாரிகள், மீன்வளத்துறை அதிகாரிகள், இரு மீனவர்களையும் ஆறுகாட்டுத்துறையிலிருந்து படகில் அழைத்துச் சென்றனர் பின்னர், இம் மீனவர்கள் கப்பற்படையினரின் ரோந்து படகு மூலம் அழைத்துச் செல்லப்பட்டு இந்திய கோஸ்ட் கார்டு கப்பல் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து சர்வதேச கடல் எல்லையில் இலங்கை கடற்படையினரிடம் மீனவர்கள் இருவரும் ஒப்படைக்கப்பட்டனர்.