முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2002-ம் ஆண்டிலேயே பின்லேடன் பாக். வந்து விட்டார்..!

செவ்வாய்க்கிழமை, 9 ஜூலை 2013      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், ஜூலை. 10 - அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் 2002 ம் ஆண்டிலேயே பாகிஸ்தான் வந்து விட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அவர் 2011 ம் ஆண்டு அமெரிக்க வீரர்களால் கொல்லப்படும் வரை பாகிஸ்தானில் இருந்துள்ளார். பின்லேடன் கொல்லப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்ட அபோட்டாபாத் கமிஷன் அறிக்கையில் இத்தகவல் வெளியாகி உள்ளது. எனினும் இந்த கமிஷன் அறிக்கை தொடர்பாக ரகசியமாக கசிந்த தகவல்களை பாகிஸ்தான் பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன. அதன்படி 2001 ம் ஆண்டு நவம்பரில் அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலுக்கு பின் பின்லேடனின் குடும்பத்தினர் பாகிஸ்தான் வந்துள்ளனர். அடுத்த சில மாதங்களிலேயே பின்லேடனும் அவர்களுடன் இணைந்துள்ளார். 

அமெரிக்காவில் நிகழ்ந்த தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட அல்கொய்தா பயங்கரவாதி காலித் பின் அட்டாஸிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இத்தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பாகிஸ்தானில் பின்லேடனுக்கு வலது கையாக செயல்பட்டு அனைத்து காரியங்களையும் மேற்கொண்ட அபு அகமது அலியையும் அட்டாஸ் அடையாளம் காட்டியுள்ளார். அபு அகமது அலி பயன்படுத்திய 4 தொலைபேசி எண்கள் குறித்த விவரத்தை பாகிஸ்தானிடம் இருந்து அமெரிக்கா பெற்றுள்ளது. ஆனால் எதற்காக இந்த விபரம் என்பதை அமெரிக்கா, பாகிஸ்தான் அரசிடம் கூறவில்லை. அமெரிக்க வீரர்களால் பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்ட போது அவரது கையில் துப்பாக்கி இருந்துள்ளது. அறைக்குள் வருபவர்கள் மீது வீச கையெறி குண்டை தேடிக் கொண்டிருந்த போது பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்