முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்பெக்ட்ரம் வழக்கில் இருந்து விடுவியுங்கள்: பெகூரா

வெள்ளிக்கிழமை, 29 ஜூலை 2011      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி, ஜூலை 29 - 2 ஜி. ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று ஆ.ராசாவின் முன்னாள் உதவியாளர் சித்தார்த் பெகூரா சி.பி.ஐ. கோர்ட்டில் கடிதத்தின் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். ரூ. 1.76 லட்சம் கோடி 2 ஜி.ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர், தி.மு.க.வைச் சேர்ந்த ஆ.ராசா, அவரது உதவியாளர்கள் சித்தார்த் பெகூரா, சந்தோலியா உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டு டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சி.பி.ஐ. பல்வேறு கட்ட விசாரணைகளின் முடிவில் முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. மேலும் இரண்டாவது குற்றப்பத்திரிகை விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று சி.பி.ஐ. தரப்பில் கூறப்பட்டு வருகிறது.   

இந்நிலையில் டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி.ஷைனியிடம், சித்தார்த் பெகூராவின் கடிதம் ஒன்றை அவரது வக்கீல் அமன்லேகி தாக்கல் செய்துள்ளார். அந்த கடிதத்தில் பெகூரா  தான் ஒரு அரசு ஊழியர் என்றும், அப்போதைய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசாவின் உத்தரவுப்படிதான் தான்  செயல்பட்டதாகவும் அதனால் இந்த ஊழல் வழக்கில் தன்னை குற்றவாளியாக ஆக்க முடியாது என்றும்  கூறியுள்ளார். முதலில் வருவோருக்கே முன்னுரிமை என்ற கொள்கையின் அடிப்படையில் செல்போன் கம்பெனிகளுக்கு 2 ஜி.ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டது உண்மைதான் என்றும், ஆனால் இந்த கொள்கையை பிரதமரின் அலுவலகத்திற்கு தெரிந்தே ஆ.ராசா பின்பற்றினார் என்றும் இதற்கு அப்போதைய சொலிசிட்டர் ஜெனரலும், இப்போதைய அட்டர்னி ஜெனரலுமான வாகன்வதியே அங்கீகாரம் செய்துவிட்டார் என்றும் எனவே மேல் அதிகார வட்டாரங்களின் கட்டளைப்படியே தான் செயல்பட்டதாகவும், தனக்கும் இந்த விவகாரத்திற்கும் தொடர்பில்லை என்றும் எனவே தன்னை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றும்  கடிதத்தில் பெகூரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்