முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. செயற்குழு இன்று கூடுகிறது

வியாழக்கிழமை, 29 டிசம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, டிச.30 - அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையை அடுத்த வானகரம் பகுதியில் ஸ்ரீவாரு வெங்கடேஸ்வரா மண்டபத்தில் இக் கூட்டம் நடைபெறுகிறது.  நடைபெறுகிறது.அதிமுக பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா உட்பட கட்சியின் தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் பலர் இக் கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்.

இந்தக்கூட்டத்தில் 200க்கும் மேற்பட்ட தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ,உள்ளிட்ட 2500க்கும் மேலான பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர் . அவர்களுக்கு தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.  நடைபெற்று முடிந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றதற்கு பிறகு முதன் முதலாக இன்று செயற்குழு மற்றும் பொதுக் குழு கூட்டம் நடைபெற உள்ளது. அதிமுக பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா முன்னிலையில் கட்சியின் அவைத் தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் நடைபெறும் இக் கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், நகர ஒன்றிய செயலாளர்கள் மற்றும் செயற்குழு, பொதுக் குழு உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர்.

மாநில அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மேயர்கள், மண்டல குழு தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி., எம்எல்ஏக்கள், தலைமைக் கழக பேச்சாளர்கள், முன்னாள் வாரியத் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக பொதுக் குழு கூட்டத்தில் கலந்து கொள்வார்கள்.

இம்மாதம் 19ந் தேதி சசிகலா நடராஜன் குடும்பத்தினரை கட்சி உறுப்பினர் பொறுப்பிலிருந்து விடுவித்ததற்கு பிறகு நடைபெறுகிற முதல் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் என்பதால் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரிய அளவிற்கான எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் முல்லைப் பெரியாறு பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை,தமிழகத்திற்கு மத்திய அரசிடமிருந்து சிறப்பு நிதி கோருதல் கூடங்குளம் அணு மின் நிலைய பிரச்சனை உள்ளிட்ட பிரச்சனைகளில் தமிழக உரிமையை நிலைநாட்டுவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது.

தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் கடந்த 6 மாதங்களாக அரசு நிறைவேற்றி வரும் பல்வேறு திட்டங்களை சுட்டிக்காட்டி முதலமைச்சருக்கும், அரசுக்கும் நன்றி தெரிவித்து சில தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்றும் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்