முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் நாளை முதல் வாக்கு எண்ணுபவர்களுக்கு பயிற்சி : மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்

திங்கட்கிழமை, 27 மே 2024      தமிழகம்
Radhakrishnan 2023 04 17

Source: provided

சென்னை : சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்பார்வையாளர்கள், நுண் பணியாளர்கள் என மொத்தம் 1,433 பேர் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ளதாகவும், அவர்களுக்கான பயிற்சி நாளை (மே.29-ம் தேதி) முதல் வழங்கப்படும் எனவும் மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், சென்னையில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் மேற்பார்வையாளர், உதவியாளர் உள்ளிட்டவர்களை கணினி குலுக்கல் முறையில் முதல்கட்டமாக தேர்வு செய்யும் பணி சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் நேற்று (மே.27) நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். கூடுதல் தேர்தல் அலுவலர் ரஷ்மி சித்தார்த் ஜகடே முன்னிலை வகித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெ.ராதாகிருஷ்ணன், “ஜூன் 4-ம் தேதி வாக்கும் எண்ணும் பணி நடைபெற உள்ளது. அந்த வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள பணியாளர்களுக்கு முதல்கட்ட கணினி குலுக்கல் முறை தேர்வு நேற்று (மே., 27) நிறைவடைந்து அவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 3 மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கைக்கும் சேர்த்து நுண் பார்வையாளர்கள் 357 பேர் தேவை. அதேபோல மேற்பார்வையாளர்கள் 374, உதவியாளர்கள் 380 பேர் தேவை. இவர்களை கணினி குலுக்கள் முறையில் எந்தெந்த பகுதியில் எந்தெந்த மேஜையில் பணி செய்ய உள்ளார்கள் என்று வரிசைப்படுத்தும் பணி நடைபெற உள்ளது.

இவர்களுடன் அலுவலக உதவியாளர் 322 பேரையும் சேர்த்தால் மொத்தமாக 1,433 பேர் வாக்கு எண்ணும் பணிக்கு தேவைப்படுகினர். 3 வாக்கு எண்ணும் மையங்களையும் சேர்த்து, மே 29-ம் தேதி (புதன்கிழமை) வாக்கு எண்ணும் மையங்களில் பணியில் ஈடுபட உள்ளவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது.

அதைத்தொடர்ந்து 2-வது முறை ஜூன் 3-ம் தேதி காலை 8 மணி அளவில், யார் யார் எந்த மக்களவை தொகுதிக்குச் செல்கிறார்கள் என்றும், ஜூன் 4-ம் தேதி காலை 5 மணிக்கு எந்த மேஜைக்கு செல்வார்கள் என்றும் தேர்வு செய்து அவர்களுக்கு தெரிவிக்கப்படும். வாக்கு எண்ணும் மையங்களில் தேவையான கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன. ஒரு மேஜைக்கு ஒரு சிசிடிவி கேமரா வீதம் பொருத்தப்படும் பணி நேற்று ஆய்வு செய்யப்பட்டது.

அதேபோல 1,384 பேர் பாதுகாப்பு பணியில் தற்போது 3 சுற்றுகளில் பணியாற்றி வருகின்றனர். இதுமட்டுமில்லாமல், வாக்கு எண்ணும் நாளில் கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்படும் செய்யப்படும். தற்போது குயின் மேரிஸ் கல்லூரியில் 176 கேமராக்கள், அண்ணா பல்கலைக்கழகத்தில் 210 கேமராக்கள், லயோலா கல்லூரியில் 198 கேமராக்கள் என மொத்தம் 584 கேமராக்கள் பயன்பாட்டில் உள்ளன.

106 கேமராக்கள் சென்னை வடக்கிலும், 132 கேமராக்கள் சென்னை தெற்கிலும், 107 கேமராக்கள் மத்திய சென்னையிலும் வாக்கு எண்ணிக்கைக்காக கூடுதலாக பொருத்தப்படும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தபால் வாக்குகளை எண்ணுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

கூடுதலாக வாக்கு எண்ணும் மையங்களில் 3 பார்வையாளர்கள் நியமிக்கப்படுவார்கள், அவர்கள் பற்றிய தகவல் ஜூன் 1-ம் தேதி தெரிவிக்கப்படும். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் தினத்தில் தேர்தல் ஆணையம் அளித்துள்ள அனைத்து வழிமுறைகளும் பின்பற்றப்பட உள்ளன. கடந்த வாரம் பூத் ஏஜென்டுகள் உடன் அந்தந்த தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தினர். அதில், பூத் ஏஜென்டுகள் சில கோரிக்கைகளை முன் வைத்தனர். ஜூன் 1-ம் தேதிக்குள் அந்தந்த அரசியல் கட்சிகள் சார்ந்த பூத் ஏஜென்ட்கள் யார் எந்த பூத்துகளுக்கு வர உள்ளார்கள் என்று அந்தந்த அரசியல் கட்சிகள் தெரிவித்தால், அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும்” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து