முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இல்லத்தரசிகளுக்கு இலவச மிக்சி-கிரைண்டர்-மின் விசிறிகள் ஜெயலலிதா பயனாளிகளுக்கு வழங்கினார்

வெள்ளிக்கிழமை, 16 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப்.- 16 - பேரறிஞர் அண்ணாவின் நாளான நேற்று (செப்.15)தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் நேற்று திருவள்ளூர் அருகே நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா குடும்ப பெண்களுக்கு இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, ஏழைகளுக்கு ஆடு, மாடுகள், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்- டாப் மற்றும், 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித் தொகைகளை வழங்கினார். உதவிகளை  பெற்றுக்கொண்ட பயனாளிகள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றியையும், வாழ்த்துக்களையும்  தெரிவித்தார்கள்.  இப்போதுதான் எங்களுக்கு நிம்மதி. இனி எங்களது வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும் என்று இலவச திட்டங்களை பெற்றுக் கொண்ட பயனாளிகள் மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்கள். திருவள்ளூர் அடுத்த காக்களூரில் உள்ள தர்மமூர்த்தி ராவ்பதூர் கலவலகண்ணன் செட்டி இந்து மேல்நிலைப்பள்ளியில் மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் பந்தலுக்கு வெளியேயும், கொளுத்தும் வெயிலில் ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் திரண்டிருந்தார்கள். சாலையின் இருபக்கமும் சாரை சாரையாக மக்கள் வந்த வண்ணம் இருந்தார்கள். சாலையில் மக்கள் வெள்ளத்தால் கார்கள் செல்ல முடியாமல் மெல்ல, மெல்ல ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. முதல்வர் ஜெயலலிதா தேர்தல் நேரத்தில் 54 வாக்குறுதிகளை அளித்தார். இந்த வாக்குறுதிகளில் 7 வாக்குறுதிகள் பதவி ஏற்ற முதல் நாளிலேயே நிறைவேற்றினார். 

அதாவது 20 கிலோ இலவச அரிசி, படித்த ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவி, தாலிக்கு தங்கம், முதியோர் உதவித் தொகை 1,000 ரூபாயாக உயர்வு, அரசு பெண் ஊழியர்களின் மகப்பேறு விடுப்பு 6 மாதமாக உயர்வு என 7 திட்டங்களில் பதவியேற்ற அன்றைய தினமே கையெழுத்திட்டார். அனைத்து வாக்குறுதிகளையும் ஒன்றரை ஆண்டில் நிறைவேற்றுவேன் என்றும் முதல்வர் ஜெயலலிதா சூளுரைத்தார். அதற்கேற்ப ஒவ்வொரு வாக்குறுதியாக முதல்வர் நிறைவேற்றி வருகிறார். இந்த வாக்குறுதிகளை தவிர புதுப்புது திட்டங்களையும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார். 

நேற்று இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி மற்றும் பல்வேறு உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திருவள்ளூரை அடுத்த  காக்களூர் ஆர்.பி.சி.சி. பள்ளியில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஜெயலலிதா சென்னையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் காலை 10.40 மணிக்கு விழா மேடை அருகே உள்ள ஹெலிபேட் மைதானத்தில் வந்து இறங்கினார். அங்கு முதல்வர் ஜெயலலிதாவை அமைச்சர்கள் ஏ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், எம்.சி.சம்பத், பி.வி.ரமணா ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்கள்.

அங்கிருந்து முதலமைச்சர் ஜெயலலிதா விழா மேடைக்கு வந்தார். மேடை அருகே சபாநாயகர் டி.ஜெயக்குமார், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்கள்.

முதலமைச்சர் ஜெயலலிதா விழா மேடைக்கு 10.50 மணிக்கு வந்ததும், அங்கு வெள்ளமென திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் வாழ்த்து கோஷம் எழுப்பி, உற்சாகத்துடன் வரவேற்றார்கள். முதலமைச்சர் மேடையில் நின்று அங்கு திரண்டிருந்த மக்களை பார்த்து கையசைத்தும், கைக்கூப்பி வணங்கியும் மக்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டார்.

இந்த விழாவிற்கு சபாநாயகர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். தலைமை செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி வரவேற்று பேசினார்.

கைத்தறித்துறை அமைச்சர் பி.வி.ரமணா முன்னிலை வகித்து பேசினார். முதலமைச்சர் திருவள்ளூர் மாவட்டத்திற்கு நிறைவேற்றியுள்ள திட்டங்களை பட்டியல் போட்டு காட்டினார். 

அமைச்சர் ஓ.பன்னீர்ச்செல்வம், கே.ஏ.செங்கோட்டையன், நத்தம் ஆர்.விஸ்வநாதன், எம்.சி.சம்பத், என்.ஆர்.சிவபதி ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.

இதன்பின்னர் முதலமைச்சர் ஜெயலலிதா பேசினார். பின்னர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். குடும்ப தலைவிகளுக்கு மின்விசிறி, மிக்சி மற்றும் கிரைண்டர்களை முதலமைச்சர் ஜெயலலிதா விழா மேடையில் வழங்கினார்.

அனைத்து பொருட்களும் டிராலியில் வைத்து மேடைக்கு கொண்டு வரப்பட்டது. முதலமைச்சர் தன் கைப்பட அந்த பொருட்களை ஏழை தாய்மார்களுக்கு வழங்கினார். திருவள்ளூர் மாவட்டம் கன்னிமாபேட்டையை சேர்ந்த சகுந்தலா, புஷ்பா, சாந்தி, முனியம்மாள், லதா கன்னியம்மாள், சுசீலா ஆக 7 பேருக்கு ம் இந்த பொருட்களை முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்.

மின் விசிறி ரூ.1,064.85, மிக்சி ரூ.1,333, 93, கிரைண்டர் ரூ.3,045 ஆக மொத்தம் ரூ.5,444 மதிப்புள்ள இந்த பொருட்களை முதலமைச்சர் வழங்கினார்.

மேடையில் இந்த பொருட்களை பெற்றுக் கொண்டவர்கள் முதலமைச்சருக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தார்கள்.

இதேபோன்று கொப்பூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் டி.சத்யா, மயூரி மைதிலி, கோபிநாத், காக்களூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 12-ம் வகுப்பு மாணவர்கள் பா.நவாஸ், நவீன்குமார், மனோஜ், ஒயலட் ஆகிய 7 பேருக்கு இலவச லேப்-டாப்க்களை முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்.

ஒரு லேப்-டாப்ப்பின் மதிப்பு 14 ஆயிரத்து 71 ரூபாய் ஆகும். லேப்-டாப்புடன், அது வைப்பதற்கான பேக்கையும் முதலமைச்சர் வழங்கினார். அப்போது மாணவ, மாணவிகளிடம் நன்றாக படியுங்கள் என்று தோளில் தட்டிக் கொடுத்து அவர்களை முதலமைச்சர் ஊக்கப்படுத்தினார்.

மாணவர்கள் பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்தாமல் தொடர்ந்து படிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் 10-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்புகளில் படிக்கும்போது அவர்கள் பெயரில் 1,500 ரூபாயும், 12-ம் வகுப்பு படிக்கும் பொழுது 2 ஆயிரும் ரூபாயும் வைப்பு நிதியாக வைக்கப்பட்டு 12-ம் வகுப்பு படித்து முடித்ததும், வட்டி தொகையுடன் மாணவர்களுக்கு அந்த பணம் வழங்கப்படும் என்றும் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

அதன்படி நேற்று கொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் நவீன்குமார், சுகுமார், பூண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் ஏ.பரத், அனிதா, காக்களூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் எம்.சுகன்யா, டி.உமா நத்தினினி, பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் எம்.சுபாஷினி, டி.நந்தினி,கே.நாகராஜ் ஆகிய 7 பேருக்கும் 1500 ரூபாய் ஊக்கத் தொகையை முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்.

காக்ளூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் எஸ்.திபேகா, பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுக்பு படிக்கும் ரங்கீலா, எம்.பானுப்பிரியா, பி.விஜய், பி.ரூபசுகமார், டி.சதீஷ் ஆகியோருக்கு 2 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையை முதலமைச்சர் வழங்கினார். மொத்தம் 21 மாணவ, மாணவிகளுக்கு இந்த ஊக்கத் தொகைகளை முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்.

கிராமப்புற ஏழை மக்களுக்கு கறவை மாடுகளை முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கினார். கோலப்பன்சேரி கிராமத்தை சேர்ந்த மல்லிகா, எம்.தேவகி, ஞானலட்சுமி, தேவி, ரங்கநாயகி, லட்சுமி, பானுமதி ஆகிய 7 பேருக்கும் கறவை மாடுகளுக்கான ஆணையை அவரது கையில் முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கினார். ஒரு பயனாளிகளுக்கு 36 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கலப்பின ஜெர்சி கறவை மாடுகள் வழங்கப்பட்டது.

இதேபோன்று கிராமப்புற ஏழைகளுக்கு ஆடுகளையும் ஜெயலலிதா வழங்கினார். சிட்ரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த யசோதா, பிரேமா, பச்சையம்மாள், துரையம்மாள், முடியலா, சுலோச்சனா ஆகிய 7 வபேருக்கும் ஆடுகளுக்கான ஆணைகளை ஜெயலலிதா வழங்கினார்.

ஒரு பயனாளிகளுக்கு 4 ஆடுகள் வழங்கப்பட்டன. இதன் மதிப்பு 13 ஆயிரம் ரூபாய் ஆகும். இந்த நிகழ்ச்சியின் முடிவில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆஷிஷ் சாட்டர்ஜி நன்றி கூறினார்.

முன்னதாக ஜெயலலிதா மேடைக்கு வரும்முன் மேடை அருகே அவருக்கு போலீஸ் அணி வகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதனை முதலமைச்சர் ஜெயலலிதா ஏற்றுக்கொண்டார். மேடையின் வலதுபுறம் கொட்டகை அமைக்கப்பட்டிருந்தது. அந்த கொட்டகையில் மாடுகளின் சொந்தக் காரர்களும், ஆடுகளின் சொந்தக்காரர்களும் ஆங்காங்கே நின்றார்கள். முதலமைச்சர் ஜெயலலிதா நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அங்கே வந்தார். பயனாளிகளின் கையில் மாடுகளையும், ஆடுகளையும் ஒப்படைத்தார். இதனை வைத்துக் கொண்டு நீங்கள் வாழ்க்கையில் பொருளாதார ரீதியில் நல்ல முன்னேற்றம் காணவேண்டும் என்று முதலமைச்சர் கூறினார்.

முதலமைச்சருக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து அந்த ஏழை தாய்மார்கள், அம்மா நீங்க நல்லாயிருக்கணும் என்று நெஞ்சார வாழ்த்தினார்கள். 12.30 மணி அளவில் முதலமைச்சர் அங்கிருந்து புறப்பட்டு சென்னைக்கு சென்றார்.  

முதலமைச்சரை காணவும், அவரதுபேச்சை  கேட்கவும் மக்கள் வெள்ளமென திரண்டிருந்தார்கள். நிகழ்ச்சிக்காக பல்லாயிரக்கணக்கான பேர் உட்காரும் வகையில் பிரம்மாணட பந்தல் போடப்பட்டிருந்தது. பந்தல் நிரம்பி பந்தலுக்கு வெளியேயும் கொளுத்தும் வெயிலில் ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் தலைமையில் துண்டுகளை போட்டுக் கொண்டு நின்றார்கள்.

அந்த பகுதி முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது. முதலமைச்சருக்கு மேள தாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முதலமைச்சரை வரவேற்று ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. வழி நெடுக கொடி, தோரணங்கள் கட்டப்பட்டிருந்தது.         

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago