முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டது

புதன்கிழமை, 20 பெப்ரவரி 2013      அரசியல்
Image Unavailable

புது டெல்லி, பிப். 21 - பிப்ரவரி 20 ம் தேதிக்குள் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் இறுதிக் கெடு விதித்திருந்தது. இதையடுத்து இத்தனை காலம் நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை கெஜட்டில் வெளியிடாமல் சுணக்கம் காட்டி வந்த மத்திய அரசு, தற்போது சுப்ரீம் கோர்ட்டின் கெடுவுக்கு பணிந்து நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை கெடு முடிவதற்கு முதல் நாள் அதாவது நேற்று முன்தினமே கெஜட்டில்(அரசிதழில்) வெளியிட்டு விட்டது. எனவே இனிமேல் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது என்று கர்நாடகம் மறுக்கவே முடியாது. அப்படி ஒரு உத்தரவாதம் தமிழகத்திற்கு கிடைத்து விட்டது. நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு கெஜட்டில் வெளியிடப்பட்டு விட்டதால் தமிழக மக்களும், டெல்டா விவசாயிகளும், அ.தி.மு.க.வினரும் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கியிருக்கிறார்கள். இது தனக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று முதல்வர் ஜெயலலிதாவும் கூறி உள்ளார். இப்போதுதான் தனக்கு மன நிறைவாக இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார். இந்த வெற்றியை அ.தி.மு.க. வினரும், விவசாயிகளும் பட்டாசு வெடித்து தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகிறார்கள். 

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வெளியாகி 6 வருடங்களாகி விட்டன. ஆனால் இந்த தீர்ப்பை மத்திய அரசு கெஜட்டில்(அரசிதழில்) வெளியிடாமலேயே இருந்து வந்தது. இதற்கு முன்பாக இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதும் கெஜட்டில் வெளியிடாமல் மத்திய அரசு சுணக்கம் காட்டியது. பின்னர் பல போராட்டங்களுக்கு பிறகு நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்பு கெஜட்டில் வெளியானது. இறுதித் தீர்ப்பை மத்திய அரசு வெளியிடாமலேயே இருந்து வந்தது. நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடக் கோரி பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு முதல்வர் ஜெயலலிதா பலமுறை கடிதங்கள் எழுதினார். 

இதற்கு முன்பு தமிழகத்தை ஆட்சி செய்த கருணாநிதி உட்பட வேறு எவரும் காவிரி விவகாரத்தில் இந்தளவிற்கு அக்கறை காட்டியதில்லை. மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்ததும் இல்லை. ஆனால் முதல்வர் ஜெயலலிதா மட்டும் நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு கெஜட்டில் வெளிவர வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். அந்த முயற்சிகளுக்கு மத்திய அரசு ஒத்துழைக்காததால் அவர் சுப்ரீம் கோர்ட்டை நாடினார். காவிரி பிரச்சினை தொடர்பான வழக்கு கடந்த பிப்ரவரி 4 ம் தேதியன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. 

அப்போது நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடாமல் தாமதம் செய்வதா? என்று மன்மோகன்சிங் அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் இறுதித் தீர்ப்பை கெஜட்டில் வெளியிட எதிர்ப்பு தெரிவித்த கர்நாடக அரசுக்கும் சுப்ரீம் கோர்ட் தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடுவது மத்திய அரசின் கடமை. தீர்ப்பு வெளியாகி 6 ஆண்டுகளாகி விட்ட நிலையில் அதை இன்னமும் செய்யாதது ஏன்? என்று கேள்வி எழுப்பி கடும் கண்டனம் தெரிவித்தனர். 

இதற்கு பதிலளித்த மத்திய அரசு வழக்கறிஞர் கர்நாடக அரசுதான் எதிர்க்கிறது என்று தெரிவித்தார். இதையடுத்து கர்நாடகத்திற்கும் உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட மத்திய அரசு கால அவகாசம் கோரியது. ஆனால் இதை நிராகரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பிப்ரவரி 20 ம் தேதிக்குள் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டாக வேண்டும் என்று மத்திய அரசுக்கு அதிரடியாக உத்தரவிட்டனர். இதனால் மத்திய அரசு ஆடிப்போனது. ஓட்டு வங்கியை கருத்தில் கொண்டே நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடாமல் மத்திய அரசு சுணக்கம் காட்டி வந்தது. 

ஆனால் சுப்ரீம் கோர்ட் கெடு விதித்ததால் மத்திய அரசுக்கு வேறு வழி தெரியாமல் போனது. இந்த நிலையில் கர்நாடக முதல்வர் ஷெட்டர், டெல்லி சென்று பிரதமரை சந்தித்து நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடக் கூடாது என்று மன்றாடினார். கர்நாடகத்தை சேர்ந்த சித்தராமய்யா, அனந்தகுமார், ரேவண்ணா, பசவராஜ் போன்ற சர்வ கட்சித் தலைவர்களும் பிரதமரை அவரது இல்லத்தில் சந்தித்து நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடக் கூடாது என்று வற்புறுத்தினார்களாம். ஆனால் மத்திய அரசு நேற்று முன்தினம் ஒரு முடிவுக்கு வந்தது. காரணம், சுப்ரீம் கோர்ட் விதித்த கெடு நேற்றுடன் முடிவுக்கு வந்ததால் நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட மத்திய அரசு முடிவு செய்தது. இதையடுத்து நேற்று முன்தினமே நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு கெஜட்டில் வெளியிடப்பட்டது. இவ்வாறு இறுதித் தீர்ப்பு வெளியாகி இருப்பது கர்நாடகத்திற்கு ஏற்பட்டுள்ள மாபெரும் பின்னடைவாகும். தமிழகத்திற்கு இதன் மூலம் மகத்தான வெற்றி கிடைத்துள்ளது. தமிழக முதல்வருக்கும், தமிழக அரசுக்கும், டெல்டா விவசாயிகளுக்கும் மாபெரும் வெற்றி கிடைத்திருப்பதாக முதல்வர் ஜெயலலிதா நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தனது 30 ஆண்டு கால பொதுவாழ்க்கையில் தான் செய்த மகத்தான சாதனையாக தான் இதை கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இன்றுதான் தனக்கு மனநிறைவு கிடைத்திருப்பதாகவும் முதல்வர் ஜெயலலிதா கூறினார். நடுவர் மன்ற தீர்ப்பு கெஜட்டில் வெளியாகி இருப்பதால் இனி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது என்று கர்நாடகம் மறுக்க முடியாது. மறுக்கவும் வழியில்லை. அப்படிப்பட்ட ஒரு உத்தரவாதம் தமிழக அரசுக்கும், டெல்டா விவசாயிகளுக்கும் கிடைத்துள்ளது. 

இனி டெல்டா விவசாயிகளுக்கு ஒரு நல்ல எதிர்காலம் என்றே சொல்லலாம். தமிழகத்திற்கு இந்த விஷயத்தில் நீதி கிடைத்து விட்டது என்பது மறுக்க முடியாத உண்மை. நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு கெஜட்டில் வெளியாகி விட்டதால் பிரதமர் தலைமையிலான காவிரி ஆணையம் மற்றும் கண்காணிப்பு குழு ஆகியவை கலைக்கப்படும். அல்லது காலாவதியாகி விடும். புதிதாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும். எனவே இனிமேல் நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை கர்நாடகம் ஒவ்வொரு ஆண்டும் அமல்படுத்தியே ஆக வேண்டும். அதன்படி தமிழ்நாட்டுக்கு ஆண்டுக்கு 419 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் கொடுத்தே தீர வேண்டும். எனவே நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு கெஜட்டில் வெளியானதால் தமிழக விவசாயிகள், தமிழக மக்கள், அ.தி.மு.க.வினர் என பலதரப்பட்ட மக்களும் தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்து இந்த மகிழ்ச்சியை கொண்டாடி வருகிறார்கள். 

 

6 ஆண்டுகளுக்குப் பிறகு...

 

கர்நாடகத்தின் எதிர்ப்புகளையும் மீறி காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு நேற்று அரசிதழில் வெளியிடப்பட்டது. எனவே இனி எந்தக் காரணத்தைக் கொண்டும் தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என்று கர்நாடக அரசு கூற முடியாது. தமிழகத்திற்குரிய தண்ணீரை கர்நாடகம் தந்தே தீர வேண்டும். அப்படிப்பட்ட ஒரு சட்ட பாதுகாப்பு தமிழகத்திற்கு கிடைத்துள்ளது. 

காவிரி நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பை 2007 ம் ஆண்டில் வெளியிட்டது. அதாவது, 6 ஆண்டுகளுக்குப் பிறகு நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு நேற்று அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான அரசாணையின் நகல் நேற்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதே போல் தமிழ்நாடு, கர்நாடகம், புதுச்சேரி, கேரள மாநில அரசுகளுக்கும் அரசாணையின் நகலை மத்திய அரசு வழங்கியுள்ளது. 

நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பில் காவிரியில் தமிழகத்திற்கு 419 டி.எம்.சி. தண்ணீரும், கர்நாடகத்திற்கு 270 டி.எம்.சி. தண்ணீரும், கேரளாவிற்கு 30 டி.எம்.சி. நீரும், புதுச்சேரிக்கு 7 டி.எம்.சி. நீரும் அளிக்கப்பட வேண்டும். இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டு விட்டதால் நதிநீர் பங்கீடுகள் தானாகவே சட்ட நடைமுறைக்கு வந்து விடும். இந்த தீர்ப்பை மாற்ற யாருக்கும் உரிமையில்லை. 

 

90 நாட்களுக்குள் அமலுக்கு வரும்

 

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் என்ன கூறப்பட்டுள்ளதோ, அதன் அடிப்படையிலேயே கர்நாடகம், தமிழகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் காவிரி நீரை பங்கிட்டுக் கொள்ள வேண்டும். அவரவருக்கு உரிய நீரை கர்நாடகம் கொடுத்தே தீர வேண்டும். எந்தக் காரணம் கொண்டும் மறுக்க முடியாது. நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பின் அடிப்படையில்தான் தற்போது தண்ணீர் கொடுத்து வந்த கர்நாடகம், பல சமயங்களில் அதையும் கூட கொடுக்காமல் முரண்டு பிடித்து வந்தது. 

ஆனால் இனி அப்படி நடக்காது. நடக்கவும் முடியாது. அரசிதழில் வெளியிடப்பட்ட நாளில் இருந்து 90 நாட்களுக்குள் இந்த அறிவிக்கை அமலுக்கு வரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் காலையிலேயே இந்த அறிவிக்கைக்கு மத்திய நீர்வளத் துறை செயலாளர் ஒப்புதல் அளித்து விட்டார். பிரதமரின் அனுமதியை தொடர்ந்து அவர் கையெழுத்திட்டார். 

அதன் பின்னர் அந்த அறிவிக்கையை நேற்று முன்தினம் மாலைக்கு மேல் அரசு வெளியிட்டது. இந்த தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து நதிநீர் ஆணையம், கண்காணிப்பு குழு ஆகியவை ரத்தாகி விடும். அதற்குப் பதிலாக காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறை ஆணையம் ஆகியவை உருவாக்கப்படும் என்று தெரிகிறது. இனி, இவைதான் நதிநீர் பங்கீட்டை கண்காணித்து அமல்படுத்தும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்