முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேலூர் மாவட்டத்தில் இளம் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி:கலெக்டர் சி.ராமன் துவக்கி வைத்தார்

புதன்கிழமை, 25 ஜனவரி 2017      வேலூர்
Image Unavailable

வேலூர்:ஒவ்வொரு வருடமும் ஜனவரி திங்கள் 25 ஆம் நாள் தேசிய வாக்காளர் தின விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 7 வது தேசிய வாக்காளர் தின விழாவினை முன்னிட்டு கலெக்டர் சி.அ.ராமன்,  இளம் வாக்காளர்களின் தேர்தல் விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்து மூத்த குடிமக்களை கௌரவித்தார். இப்பேரணி வேலூர் மாவட்ட கோட்டை மைதானம் காந்தி சிலை அருகில் தொடங்கி ஊரிசு கல்லூரி வளாகத்தில் நிறைவுற்றது.

பின்னர் அங்கு நடைபெற்ற 7வது தேசிய வாக்காளர் தின விழாவில் மாவட்ட அளவில் பள்ளிகளுக்கிடையே நடைபெற்ற பேச்சு, எழுத்து மற்றும் ஓவியப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற 27 மாணவ மாணவிகளுக்கும், கல்லூரிகளுக்கிடையே நடைபெற்ற பேச்சு, எழுத்து மற்றும் கவிதைப் போட்டிகளில் வெற்றி பெற்ற 9 மாணவ மாணவிகளுக்கும் கலெக்டர் அவர்கள் பாராட்டு சான்றிதழ்களையும், பரிசுப்பொருட்களையும் வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:-நம்முடைய பாரத திருநாட்டில் 1950 ஆம் வருடம் ஜனவரி மாதம் 25 ஆம் நாள் இந்திய தேர்தல் ஆணையம் ஏற்படுத்தப்பட்டது. அந்த நாளை விழாவாக கொண்டாட வேண்டும் என்பதற்காக 2010 ஆம் ஆண்டிலிருந்து இந்த நாளை தேசிய வாக்காளர் நாளாக கொண்டாடுகிறோம். ஜனநாயகத்தின் மாண்பை கட்டிகாக்க தேசிய வாக்காளர் நாள் கொண்டாடப்படுகிறது. மன்னராட்சி முடிந்து மக்களாட்சி ஏற்பட்டபோது தேர்தலுக்கு முக்கியத்துவம் கொடுக்க அனைவரும் வாக்களிப்பது அவசியமான ஒன்றாக இருந்தது. நமது இந்திய நாடு உலக அரங்கில் மிகப்பெரிய ஜனநாயக நாடாகும். தேர்தலின் மூலம் வாக்களித்து தகுதியான நபர்களை தேர்ந்தெடுப்பதால் ஜனநாயகத்தின் மாண்பு கட்டிக்காக்கப்பட்டு வருகிறது.கடந்த காலங்களிலே தேர்தலில் வாக்களிக்க முதலில் 21 வயது பூர்த்தி அடைந்தவர்களுக்கு உரிமை இருந்து வந்தது. பின்னர் இந்த வயது வரம்பு 18 ஆக குறைக்கப்பட்டது. இதன்மூலம் இளைஞர்கள் பெருமளவில் தங்கள் பங்களிப்பை வழங்க வாய்ப்பு ஏற்பட்டது. 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் தங்களுடைய பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதற்காக இது போன்ற விழிப்புணர்வு கூட்டங்களும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது. 18 வயது நிரம்பிய இளம் வாக்காளர்கள் 46 சதவிகிதம் மட்டுமே தங்களை வாக்காளர் பட்டியலில் இணைத்துள்ளனர். இதனை நாம் 100 சதவிகிதமாக மாற்றி காட்ட வேண்டும். இந்நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் அஜய் சீனிவாசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) நாராயணன், நேரு யுவகேந்திரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயா ராவ், வேலூர் வட்டாட்சியர் பழனி, வட்டாட்சியர் (தேர்தல்) விஜயகுமார், மற்றம் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்