முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்திரப்பிரதேசத்தில் இன்று முதல்கட்டத் தேர்தல் 73 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது

வெள்ளிக்கிழமை, 10 பெப்ரவரி 2017      அரசியல்
Image Unavailable

உத்திரப்பிரதேச மாநிலத்தில் சட்டசபைக்கு இன்று முதல்கட்டமாக 73 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இதனையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

7 கட்ட தேர்தல்:

உத்திரப்பிரதேச மாநிலத்தில் 7 கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் காங்கிரஸ்-சமாஜ்வாடி கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இந்த கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி உள்பட காங்கிரஸ் தலைவர்களும் மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் உள்பட சமாஜ்வாடி கட்சி தலைவர்களும் பிரசாரம் செய்யவில்லை. ஆனால் அகிலேஷ் யாதவின் தந்தை முலயாம்சிங் பிரசாரத்தில் இதுவரை ஈடுபடவில்லை. பாரதிய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி மற்றும் பாரதிய ஜனதா தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்தனர். பகுஜன்சமாஜ் கட்சிக்கு அந்த கட்சியின் மாயாவதி உள்பட தலைவர்கள் பிரசாரம் செய்தனர். பகுஜன்சமாஜ் கட்சிக்கு டெல்லி இமாம் ஆதரவு அளித்துள்ளார். இதனால் பெரும்பான்மையான முஸ்லீம்கள் மாயாவதி கட்சிக்கு வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் கட்ட தேர்தல்

மாநில சட்டசபைக்கு முதல் கட்டமாக 73 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மாநிலத்தின் மேற்குப் பகுதியில் உள்ள 15 மாவட்டங்களுக்குட்பட்ட 73 தொகுதிகளில் இன்று முதல்கட்டதேர்தல் நடைபெறுகிறது.

2013-ல் வகுப்புக்கலவரம் நடந்த முஸாபர்நகர், ஷாம்லி ஆகிய மாவட்டங்களும் இதில் அடக்கம். அதனால் இந்த மாவட்டங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாக்பட், மீரட், காஸியாபாத், கவுதம்புத் நகர், ஹாபூர், புலந்த்ஸாகர், அலிகார், மதுரா, ஹத்ரஸ், ஆக்ரா, எட்டா, பிரோஸா பாத், காஸ்கஞ்ச் ஆகியவை மாவட்டங்களிலும் இன்று முதல்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் நடைபெறும் இந்த மாவட்டங்களில் ஜாட் இனத்தை சேர்ந்தவர்கள் அதிகமாக உள்ளனர்

2.57 கோடி பேர்:

முதல்கட்டத் தேர்தல் எப்படி நடக்கிறது என்பதைப் பொறுத்தே மற்ற 6 கட்ட தேர்தலும் அமையும் என்பதால் அரசியல் கட்சிகள் அனைத்துமே இதில் மிக ஆர்வமாக உள்ளன.முதல்கட்டத் தேர்தலில் 2.57 கோடி பேர் வாக்களிக்கிறார்கள். இவர்களில் சுமார் 24 லட்சம் பேர் 18 முதல் 19 வயதுக்குட்பட்டவர்கள். பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 1.17 கோடி ஆகும். மீதிப்பேர் ஆண் வாக்காளர்களாவர்கள்.

இன்று வாக்குப்பதிவு நடைபெறும் மாவட்டங்களில் 2014-ல் நடந்த மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு நல்ல ஆதரவு இருந்தது. அதேநேரம் 2012-ம் ஆண்டில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் தலா 24 தொகுதிகளில் வெற்றி பெற்றன. பாஜக 11, ராஷ்ட்ரிய லோக் தளம் 9, காங்கிரஸ் 5 தொகுதிகளில் வென்றன. இப்போது காங்கிரஸ் கட்சி ஆளும் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிடுகின்றன. உ.பி.யில் 7 மாவடங்களுக்குட்பட்ட 40 தொகுதிகளில் நடைபெற உள்ள 7-வது மற்றும் கடைசிக் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்றுமுன்தினம் தொடங்கியது. இந்தத் தொகுதிகளில் வரும் மார்ச் 8-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும். சோன்பத்ரா, மிர்சாபூர், சந்தவுளி ஆகிய நக்சல் ஆதிக்கம் நிறைந்த 3 மாவட்டங்கள் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் மக்களவை தொகுதிக்குட்பட்ட (வாரணாசி) பேரவைத் தொகுதி களும் இதில் அடங்கும். மனு தாக்கல் செய்ய வரும் 16-ம் தேதி கடைசி நாளாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்