முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாமக்கல் மாவட்டத்தில் 16 ஏரி,குளங்கள், கால்வாய்கள் ரூ.1.45 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன: அமைச்சர் டாக்டர் வி.சரோஜா தகவல்

திங்கட்கிழமை, 13 மார்ச் 2017      நாமக்கல்
Image Unavailable

 

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சேந்தமங்கலம் வட்டம் அக்கியம்பட்டி கிராமத்திலுள்ள பொன்னார் குளம் ஏரி, பொதுப்பணித்துறையின் (நீர்வள ஆதாரம்) சார்பில் குடிமராமத்து திட்டத்தின்கீழ் குடிமராமத்து புனரமைக்கும் பணி துவக்க விழா நேற்று (13.03.2017) நடைபெற்றது. இவ்விழாவிற்கு கலெக்டர் மு. ஆசியா மரியம் தலைமை வகித்தார். சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் சி.சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். இவ்விழாவில் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் வி.சரோஜா கலந்து கொண்டு பொன்னார் குளம் ஏரி குடிமராமத்து மூலம் புனரமைக்கும் பணியினை துவக்கி வைத்தார்கள். பின்னர் இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்ததாவது:மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்று மக்களுக்காகவே மக்கள் பணியாற்றி வாழ்ந்து மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் புரட்சி தலைவி அம்மா விவசாயிகளையும், அதை சார்ந்த தொழிலையும் பாதுகாத்திட மழைநீர் சேமிப்பதற்கும் அதனை பாதுகாப்பதற்கும், குடிமராமத்து பணி திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள ஏரி குளங்கள், தூர்வாரி கரைகள் பலப்படுத்தும் பணிகள் ரூ.100 கோடி மதிப்பீட்டில் இந்த ஆண்டில் துவங்கப்படும் என ஆணையிட்டார்கள். அம்மா வழியில் செயல்பட்டு வருகின்ற தமிழக அரசு அப்பணிகளை துரிதப்படுத்தி இன்றைய தினம் காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலத்தில் இப்புனரமைக்கும் பணியினை தமிழ்நாடு முதலமைச்சர் துவக்கி வைத்துள்ளார்கள். அதனைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் குடிமராமத்து பணிகள் திட்டத்தின்கீழ் ஏரி, குளங்கள் தூர்வாரி நீர்வரத்து கால்வாய்கள் ஆழப்படுத்தியும், அகலப்படுத்தும் பணிகளும், கரைகள் பலப்படுத்தும் பணிகளும், இன்றைய தினம் துவக்கி வைக்கப்பட்டுள்ளன. நாமக்கல் மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் (நீர்வள ஆதாரம்) சார்பில் மொத்தம் ரூ.1.45 கோடி மதிப்பீட்டில் 16 ஏரி, குளங்கள், கால்வாய்கள் புனரமைக்கும் பணிகள் இன்று துவங்கப்பட்டுள்ளன. இப்பணிகளை மேற்கொள்ளுவதற்கு விவசாயிகளின் பங்கு மிகமிக முக்கியமானதாகும். இப்பணிகளை மேற்கொள்ள விவசாயிகளின் சார்பில் குழு அமைக்கப்பட்டு அதில் தலைவராக தேர்ந்தெடுக்கப்படும் நபர் மூலம் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. நபார்டு நிதியுதவியுடன் நடைபெறுகின்ற இப்பணி விவசாயிகளின் பங்களிப்புத் தொகை 10 சதவீதமும், நபார்டு நிதியுதவி 90 சதவீதமும் சேர்த்து 100 சதவீதம் நிதியுதவியுடன் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மழைநீரை சேமிப்பதற்கும், நீர் ஆதாரத்தை பெருக்குவதற்கும் அதன்மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாப்பதற்கும் இத்திட்டம் மிகவும் முக்கியமான பயனுள்ள திட்டமாகும். இத்திட்டத்தின்மூலம் ஏரியின் கரைகள் பலப்படுத்தப்படுவதோடு நீர்வரத்து கால்வாய்கள் அனைத்தும் ஆரம்பம்முதல் இறுதி வரை கண்டறியப்பட்டு அனைத்து நீர்வள கால்வாய்களும், ஆழப்படுத்தி அகலப்படுத்துவதோடு, நீர்வரத்து தடையின்றி வந்துசேர்வதற்கு உரிய அனைத்து நடவடிக்கைகளும், இதன்மூலம் மேற்கொள்ளப்படவுள்ளன. இதுபோன்ற குளங்கள் ஏரிகள் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளுவதன் மூலம் ஏரிகள் மற்றும் குளங்களில் மழைநீர் சேகரிக்கப்பட்டு நிலத்தடி நீரும் உயரும் நிலை உருவாகும். இன்று குடிமராமத்து பணி மேற்கொள்ளப்படவுள்ள பொன்னார்குளம் ஏரிக்கு கொல்லிமலையில் உற்பத்தியாகும் குண்டுமடுவு ஆற்றின் மூலம் நீர் கிடைக்கப்பெறுகின்றது. இந்த ஏரியில் 4 மதகுகளும், ஒரு வழிந்தோடியும் உள்ளன. ஏரிக்கரை 1600 மீட்டர் நீளம் கொண்டதாகும். இந்த ஏரியின் மூலம் 153.070 ஹெக்டேர் ஆயக்கட்டு பரப்பளவில் பயன்படுகின்றது. மேலும் இந்த ஏரியின் மூலம் பொன்னார்குளம் மற்றும் அக்கியம்பட்டி ஆகிய கிராமங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஏரியின் முழு கொள்ளளவு உயரம் 181.235 மீட்டர் ஆகும். ஏரிக்கரையின் முழுஉயரம் 183.095 மீட்டராகும். ஏரியின் முழு நீர்கொள்ளளவு 11.30 மில்லியன் கனஆகும். ஏரியின் நீர்த்தேங்கியுள்ள பகுதி 42.90 ஹெக்டேர் (ஏறத்தாழ 100 ஏக்கர்) ஆகும். இந்த ஏரிக்கு வருகின்ற நீர்வரத்து கால்வாயின் நீளம் 7500 மீட்டர் ஆகும். இவ்வாறு அமைந்துள்ள இந்த பொன்னார் குளம் ஏரியானது ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் குடிமராமத்து மூலம் கரையை பலப்படுத்தி ஏரியின் வழிந்தோடியில் கான்கிரீட் சுவர் அமைத்து நீர்கசிவை ஏற்படுவதை தடுத்திடவும், பாசனதாரர்களின் 10 சதவீத பங்களிப்போடு குடிமராமத்து பணி மேற்கொள்ளப்படுகின்றது. மேலும் நாமக்கல் மாவட்டத்தில் அம்மா அவர்களால் கொண்டுவரப்பட்டு அம்மா வழியில் செயல்பட்டு வருகின்ற தமிழக அரசு செயல்படுத்தி வரும் குடிமராமத்து பணி திட்டத்தில் விவசாயிகளின் பங்களிப்பை முழுமையாக அளித்திட வேண்டும். இப்பணி விவசாயிகளால் தேர்ந்தெடுக்கப்படுகின்ற தலைவர் கண்காணிப்பில் நடைபெறுகின்றது. நாமக்கல் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறையின் கட்டுப்பாட்டில் 79 ஏரிகள் உள்ளன. மேலும் மேட்டூர் டிவிசன் கிழக்கு கரை பாசன பகுதியின் 3 பாசன வாய்க்கால்கள் இடம்பெற்றுள்ளன. குடிமராமத்து திட்டத்தின்கீழ் நாமக்கல் மாவட்டத்தின் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார கட்டுப்பாட்டில் உள்ள 13 ஏரிகளுக்கு தலா ரூ.10 இலட்சம் வீதம் ரூ.1.30 கோடி மதிப்பீட்டிலும், 3 கால்வாய்கள் தலா ரூ.5 இலட்சம் வீதம் ரூ.15 இலட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் 16 ஏரி குளங்கள், கால்வாய்கள் குடிமராத்து திட்டத்தின்கீழ் ரூ.1.45 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படுகின்றன. இப்பணிகள் அனைத்தும் விரைந்து முடிக்கப்பட்டு ஏரியின் கரைகள் பலப்படுத்தப்பட்டு நீர்வரத்து கால்வாய்கள் சரிசெய்யப்பட்டு மழை காலங்களில் வருகின்ற நீர் தடையின்றி இந்த ஏரிகள் மற்றும் குளங்களில் தேங்குவதற்கு இந்த திட்டம் ஒரு வரப்பிரசாதமான திட்டமாகும். இத்திட்டத்தினை விவசாய பெருங்குடி மக்கள் முழுமையாக பங்கேற்று தங்களின் பங்களிப்பை செலுத்தி இத்திட்டத்தினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் வி.சரோஜா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இவ்விழாவில் பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரம்) உதவி செயற்பொறியாளர், நாமக்கல் ஆர்.பாஸ்கரன், இராசிபுரம் ஜெ.கோபி, உதவி பொறியாளர் சேந்தமங்கலம் ஆர்.சதீஸ்குமார், சேந்தமங்கலம் வருவாய் வட்டாட்சியர் க.பாலகிருஷ்ணன், சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கே.வெங்கடாசலம், எம்.முனியப்பன், சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் மின்னாம்பள்ளி கே.நடேசன், அட்மா கமிட்டி தலைவர்கள் ஜி.பி.வரதராஜன், எம்.காளியப்பன், ஆர்.சி.எம்.எஸ். தலைவர் எஸ்.பி.தாமோதரன், நாமகிரிப்பேட்டை முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ஈ.கே.பொன்னுசாமி, அக்கியம்பட்டி முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் சி.சுப்ரமணியம் உட்பட முன்னாள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கூட்டுறவாளர்கள், விவசாயிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்