முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பூரில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் வாழை சாகுபடி கருத்தரங்கு கலெக்டர் ச.ஜெயந்தி தொடங்கி வைத்தார்

வியாழக்கிழமை, 11 மே 2017      திருப்பூர்
Image Unavailable

திருப்பூர் மாவட்டம், அவிநாசி, சேவூர் சாலை கொங்கு கலையரங்கத்தில்,  தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் விவசாயிகளுக்கான மாவட்ட அளவிலான இரண்டு நாள்  வாழை சாகுபடி கருத்தரங்கினை மாவட்ட கலெக்டர் ச.ஜெயந்தி  குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

3000ஹெக்டர் வாழை சாகுபடி

தமிழக அரசு விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு வகையான திட்டங்களில் சிறப்புடன் செயல்படுத்தி வருகிறது.  அந்த வகையில் தோட்டக்கலைப் பயிர் சாகுபடியை ஊக்குவிக்கும் திட்டமும் ஒன்று ஆகும. சராசரியாக நமது மாவட்டத்தில் ஆண்டிற்கு 3000 ஹெக்டர் வாழை சாகுபடி செய்யப்படுகிறது. பலவிதமான பழப்பயிர்களில் முக்கனிகளில் மூன்றாவதாக திகழும் வாழை பயிர் சாகுபடியை பரவலாக  நீர் வசதி உள்ள விவசாயிகள் மட்டும் சாகுபடி செய்து வருகின்றனர். விவசாயிகள் வாழை சாகுபடிக்கு அதிக நீர் செலுத்துவதும் மண்வளம் அறியாது உரம் இடுவதும், தரமான கன்றுகளை தேர்வு செய்யாமல் இருப்பதும் குறைந்த மகசூலுக்கு காரணமாக அமைகின்றது. வாழையில்  பலவித இரகங்கள் இருந்தாலும் திட்டமிட்டு திசு வாழை கன்றுகளை நடுவதே சிறந்தது.

ஆண்டு தோறும்

அவிநாசி வட்டாரத்தில் சராசரி ஆண்டு தோறும் 2,750 ஏக்கர் பரப்பில் சிறு விவசாயிகள் அதிகம் வாழை சாகுபடி செய்து வருகின்றனர். ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ஒரு ஹெக்டருக்கு ரூ.37,500/- மதிப்புள்ள திசு வாழை கன்றுகள் மானியமாக வழங்கப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் இப்பயிருக்கு சொட்டு நீர் பாசனம் அமைப்பதற்கும் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், தமிழக அரசின் முக்கிய அங்கமான தமிழ்நாடு வேளாண்மை பல்கழைக் கழகம் மூலமாக பலவித ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகிறது. நமது  மாவட்டத்தில் உள்ள அனைத்து வாழை சாகுபடியாளர்களுக்கு தொழில் நுட்பங்களை ஒன்று சேர கிடைப்பதற்காகவே இவ்வாழை சாகுபடி கருத்தரங்கு இங்கு நடைபெறுகிறது. இங்கு திரளாக வந்திருக்கும் அனைத்து விவசாயிகளும் தமிழ்நாடு வேளாண்மை பல்கழைக் கழக விஞ்ஞானிகளின் உறையை கவனமாக கேட்டு பயன் பெற வேண்டும். கருத்துக் காட்சிகளில் அளிக்கப்பட்டுள்ள விபரங்களை குறித்துக் கொண்டு பயன் பெறுமாறு கேட்டு கொள்கிறேன்.            

இயற்கை வேளாண் உற்பத்தி

இக்கருத்தரங்கில் பலராலும் கையாளத்தக்க பலவித உத்திகள் பற்றி எடுத்துரைக்கப்பட உள்ளன. குறிப்பாக மண்பரிசோதனை, நிலம் தயாரிப்பு, இயற்கை உரம் அளித்தல், காற்று தடுப்பு ஏற்பாடு, உரிய ஆழத்தில் நடவு, போதிய பயிர்கள் எண்ணிக்கை, ஊடு பயிர், வரப்பு பயிர், காப்பு பயிர் சாகுபடி, பயிர் பாதுகாப்பு உத்திகள், இயற்கை வேளாண் உத்திகளால்  வாழையின் தரம் அதிகரித்தல், சரியான கன்று தேர்வு, நுண்ணீர் பாசனம், கரையும் உரப்பாசனம, இலை வாழை சாகுபடி, நோய் நிர்வாகம், நுண்சத்து நிர்வாகம், கிழங்கு நேர்த்தி சாகுபடி, கூண் வண்டு தடுப்பு, நூற்புழு வராது காத்தல், முடிக்கொத்து நோய் வராது நடவடிக்கை எடுத்தல், அறுவடை பின்செய் நேர்த்தி, பழங்களின் தரம் பேணுதல், ஏற்றுமதி உத்திகள், வாழைக்குரிய கூட்டமைப்பு நிறுவனங்கள் அமைத்தல், நிலவரம் அறிந்து விற்பனை, சேமிப்பு உத்திகள, வாழை நார் தயாரிப்பு  வாழைக் காய் சேமிப்பு முறைகள், வாழைத் தண்டு பயன்பாடு, வேளாண் மகளிர் குழுக்களின் மூலம் வாழையில் பல்வேறு பயன்மிகு பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை  முதலிய விபரங்கள் விவரிக்கப்பட உள்ளன. இரண்டு நாட்கள் நடைபெறும் (11.05.2017 மற்றும் 12.05.2017) இக்கருத்தரங்கில் கலந்து கொண்டுள்ள  விவசாயிகள் தொழில் நுட்பங்களை  நல்ல முறையில் தெரிந்து கொண்டு பயன்பெற்று நமது மாவட்டத்தின் வாழை உற்பத்தியை அதிகரித்திட வேண்டும் என மாவட்ட கலெக்டர் அவர்கள் தெரிவித்தார்கள்.

நவீன தொழில் நுட்பம்

முன்னதாக, வாழைப்பழங்களின் ரகங்கள் குறித்தும், வாழைப்பழத்திலிருந்து தயாரிக்கப்படும் உணவுப்பொருட்கள், வாழை நாரிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் மற்றும் நவீன தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட சிசு வாழைக் கன்றுகள் ஆகியவை குறித்து அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளையும் மாவட்ட கலெக்டர் அவர்கள் பார்வையிட்டார்.

இந்நிகழ்வின்போது, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் க.ச.சுகந்தி, உதவி இயக்குநர் இளங்கோவன், தோட்டக்கலை அலுவலர்கள் மு.ஜெரினானபேகம் , லலிதா, சித்தார்த்தன், சந்திரகவிதா, ஞானசேகரன், சுசிந்திரா, சுரேஸ்குமார், துணை தோட்டக்கலை அலுவலர் பாலமுருகன், உதவி தோட்டக்கலை அலுவலர்கள், விவசாயிகள் , விவசாய சங்க பிரதிநிதிகள் உட்பட ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்