முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மன உணர்ச்சிகளால் உண்டாகும் நோய்கள் - அதனை தீர்க்க வழிகள்

புதன்கிழமை, 8 நவம்பர் 2017      வாழ்வியல் பூமி
Image Unavailable

Source: provided

மனிதனின் மனதிற்கும் உடலுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை அக்கால மருத்துவர்கள் முதல் இக்கால மருத்துவர்கள் வரை கூறி வருகிறார்கள்.

ஒருவரது மனதில் கவலை தோன்றும்போது, அவரது உடல் தளர்ந்து போவதும், கோபத்தில் இருக்கும்போது இதயம் படபடப்பதும் மன உணர்ச்சியின் அடிப்படையில் உடலின் தோன்றும் விளைவுகளாகும். அதிக அச்சம் ஏற்படுவதால் இதயத்துடிப்பு அதிகரித்தல், கை, கால்கள் இழுத்துக்கொள்ளுதல், சிலருக்கு அதிர்ச்சியில் இதயமே நின்று போவது கூட நிகழ்கிறது.

மனதில் தோன்றும் உணர்ச்சிகளுக்கும், உண்ணும் உணவிற்கும் நேரடி தொடர்பு இருப்பதாக அறிகிறோம். அதிக காரம், இனிப்பு உணவு உண்பவர்கள் வீரிய குணம் (ராட்சச) கொண்டவர்களாக இருக்கிறார்கள். அதிக கசப்பு, புளிப்பு உண்பவர்கள் சோம்பல் கொண்ட மனம் (தாமச) கொண்டவர்களாக இருக்கிறார்கள்.  எல்லா சுவைகளையும் மிதமாக உண்பவர்கள் மன அமைதியுடன் (சாத்வீக) வாழ்ப வர்களாக இருக்கிறார்கள்.
 
ஆக, ஒருவர் தன் மனதில் தோன்றும் உணர்ச்சிகளுக்கு ஏற்ப உணவை மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும். மேலும் உடற்பயிற்சி, நாடிசுத்தி, பிராணா யாமம், தியானம் போன்ற பயிற்சிகளைச் செய்வதால் தீய உணர்ச்சிகள் அடங்கி மன அமைதியும், உடல் ஆரோக்கியமும் பெறலாம்.

இனி மன உணர்ச்சிகளால் உண்டாகும் நோய்கள் பற்றிக்காண்போம்...!

அல்சர் என்னும் குடல்புண் :  அதிக மன உளைச்சல், மன அழுத்தம் உள்ளவர்கள் தங்கள் உணர்ச்சிகளை அடக்கிக் கொள்வார்கள் எனில், அவர்களது வயிற்றில் அதிக அமிலம் சுரக்கிறது. அமிலத்தின் புளிப்புத்தன்மையும் வீரியமும் குடலில் புண்களை உண்டாக்குகிறது. குடல்புண்ணால் வயிற்றில் எரிச்சல், பசி பொறுக்க இயலாமை போன்ற பக்க விளைவுகள் ஏற்படுகின்றன.

 

மலச்சிக்கல்  :  அதிக மன இறுக்கத்தால் முன்னர் குறிப்பிட்டதுபோல அதிக அமிலம் சுரக்கிறது. புளிப்புச்சுவை மலச்சிக்கலை அதிகரிக்கும் என்று முன்பே கண்டோம். தன்னைப் பற்றிய பிறர் கருத்திற்கு அதிக முக்கியத்துவம் தருபவர்கள், அதனால் குற்ற உணர்ச்சி அடைபவர்கள் பெரும்பாலும் மலச்சிக்கலால் அவதிப்படுகிறார்கள். சிலருக்கு புதிய இடச்சூழலும் மலச்சிக்கலைத் தோற்றுவிக்கும். இதற்குக் காரணமும் வெட்க உணர்ச்சியும் பயமுமே ஆகும்.

இருதய நோய்  :  அதிக கோபம், அதிக பயத்தால் இருதயம் அதிவேகமாகத் துடிக்கத் தொடங்குவதை அறிகிறோம். டென்ஷன், கோபம், பயம் போன்ற உணர்ச்சிகள் அனைத்தும் முதலில் இருதயத்தையே பாதிக்கின்றன. சிறிய விஷயங்களுக்காக கவலைப்படுபவர்கள் மற்றும் விரைவிலேயே குற்ற உணர்ச்சி அடைபவர்கள் போன்றோருக்கு இதயத்தில் பாதிப்பு உண்டாகிறது. இதனால் நரம்புச்தளர்ச்சி, இரத்த அழுத்த நோய் போன்ற நோய்கள் உண்டாகலாம்.

உடல் பருமன் - உடல் மெலிவு  :  மன உணர்ச்சிகளால் உடலில் அதிகப் பருமனும் தோன்றலாம்; சிலருக்கு எதை உண்டாலும் உடலில் சதைப்பிடிப்பு தோன்றாமல் உடல் மெலிவும் தோன்றலாம். டென்ஷனால் சிலருக்கு மலச்சிக்கல் தோன்றுவதுபோல, சிலருக்கு வயிற்றுப் போக்கும் ஏற்படலாம். இவர்கள் எதை உண்டாலும் உடலில் ஓட்டாது. ‘ஹிஸ் டீரியா’ எனப்படும் மனத்தளர்ச்சியினால் பாதிக்கப்பட்டவர்கள் உடல் மெலிந்து போவதும் இதற்கு உதாரணம் ஆகும். உடல் மெலிவுக்கு பய உணர்ச்சியும் ஒரு காரணமே.

சோம்பல் குணம் கொண்டவர்கள் அதிக உணவை உண்டு, உடல் உழைப் பைக் குறைக்கும்போது உடலில் பருமன் தோன்றும். உணவு ஜீரணமாவது குறையும் போது வயிற்றில்; பசி தோன்றாது. அதனால் வயிறு வீக்கம், உப்புசம் போன்ற விளைவுகள் தோன்றும்.

ஆஸ்துமா  :  அதிக கவலை இருதயத்தைப் பாதிப்பது போலவே நம் சுவாசத்தையும் பாதிக்கிறது. அதனால் நுரையீரல் பாதிக்கப்பட்டு மூச்சுத்திணறல், ஆஸ்துமா போன்ற சுவாச நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு. கூடவே நரம்புத்தளர்ச்சியும் தோன்ற லாம். தட்ப – வெப்பத்தைத் தாங்குகிற உடல் பலம் இருந்தாலும், மனபலம் இல்லாதவர்கள் உஷ்ணத்தையும், குளிரையும் தாங்க முடியாமல் அவதியுறுகின்றனர்.

நீரிழிவு நோய்  :  மன அழுத்தம், படபடப்பு போன்றவற்றால் இன்சுலின் சுரப்பிகளின் செயல்பாடு குறையவோ அதிகரிக்கவோ செய்யலாம். அதனால் உடலின் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. மன அழுத்தத்தால் உடல் உழைப்பு குறைகிறது. அதன் காரணமாகவும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. சர்க்கரை அளவு மிகவும் குறைந்து போவதும் நோயே என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

முதுகு - இடுப்பு வலி  :  மனதில் தோன்றும் உணர்ச்சிகளை அடக்குவதால் முதுகுப்பிடிப்பு, இடுப்புப் பிடிப்பு போன்றவை ஏற்படலாம். இவர்கள் பிறரோடு தங்கள் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளவும், மனம் விட்டு பேசவும் கற்றுக்கொள்ள வேண்டும்.

இரத்த அழுத்த நோய்  :  பிறரது செய்கை, பிறரது பேச்சு போன்றவை நம்மை பாதித்தால், நம் இரத்த அழுத்தம் உயருகிறது. அதிகக் கவலையும் இரத்த அழுத்தத்தையும் அதிகரிக்கிறது. அதிக இரத்த அழுத்தம் நரம்பு தளர்ச்சி, பக்கவாதம் போன்றவற்றிலும் கொண்டுபோய் விடுகிறது. இதிலிருந்து விடுபட தியானம், பிராணாயாமம், நடைப்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளலாம்.

 

மன அமைதிக்கான வழிகள்  :  டென்ஷன், கோபம் கூடாது, பொறுமை எப்பொழுதும் வேண்டும், பொறாமை கூடாது, பேராசை கூடாது, போதும் என்ற திருப்தியான மனநிலை எப்பொழுதும் வேண்டும். பெண்ணாசை கூடாது, மனைவி தவிர மற்றவர்களை தாயாக பார்க்கும் மனோநிலை வேண்டும். நாவடக்கம் வேண்டும், அதிகம் பேசுவதால் நம் ஆற்றல் வீணாகிறது. அதனால் தான் நம் முன்னோர் மாதத்தில் ஓர் நாள் அல்லது வாரத் தில் ஓர் நாள் மௌனவிரதம் பூணும் முறையைக் கொண்டு வந்தார்கள்.

உணவுக்கட்டுப்பாடு வேண்டும், மாமிசம் தவிர்க்கப்பட வேண்டும், பழம், கீரை, பச்சைக்காய்கறிகள் அதிகம் சேர்க்கலாம். பால், பழம் உணவாக எடுப்பது நல்லது. தினமும் ஆசனம் 5 நாடி சுத்தி, பிராணாயாமம் அரைமணி நேரம் செய்ய வேண்டும்.

அதிகாலை 4.00 மணிக்கு எழுந்துவிட வேண்டும். இரவு 9.30 மணி (அ) 10.00 மணிக்கு படுத்துவிட வேண்டும். இரவில் அதிக நேரம் கண்விழிப்பதால் உடலில் உஷ்ணம் ஏறுகிறது. உடலில் உஷ்ணம் ஏறுவதே பெரும்பாலான நோய்களுக்கு காரணமாக அமைகிறது. நம்மைத் தவறான பாதையில் செலுத்தும்படி காமத்தையும் தூண்டிவிடுகிறது.

தினமும் குளிர்ந்த நீரில் தலைக்கு குளிக்க வேண்டும். அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பது, பிறரைக் குற்றம் கூறுவது போன்றவற்றைத் தவிர்க்கவும். முடிந்த அளவு பேச்சைக் குறைக்கவும்,

நல்ல ஆன்மிக புத்தகத்தை தினமும் மூன்று பக்கமாவது படிக்கவும். எல்லோரிடமும் அன்பாகயிருக்க வேண்டும். எப்பொழுதும் உண்மை பேச வேண்டும். எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். சோம்பல் கூடாது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து