முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழங்கால முறைப்படி திரிகையால் அரைக்கப்படும் தானியங்கள்

திங்கட்கிழமை, 27 நவம்பர் 2017      வாழ்வியல் பூமி
Image Unavailable

Source: provided

கடந்த காலங்களில் ரொட்டி, சப்பாத்தி, இடியாப்பம், முறுக்கு போன்ற உணவு பண்டங்கள் தயாரித்திட, பொருட்கள் மாவாகத் தேவைப்பட்டன. அப்போது இவற்றை அரைப்பதற்கென இப்போதுள்ள 'ரைஸ் மில்கள்' அன்றைய காலகட்டத்தில் இல்லை. அதற்கு மாறாக அப்போது திரிகை எனப்படும் எந்திரக்கல் மட்டுமே இருந்ததுள்ளது. இது திருகை, திரிமரம், திரிக்கல் என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டு வருகிறது.

உலகம் முழுக்க உள்ள மக்கள், இத்திரிகை கல்லை பயன்படுத்தியே உலர்ந்த தானியங்களை அவர்கள் அரைத்தார்கள். பொருட்களை மாவு ஆக்குவது மட்டுமல்ல, பருப்பு வகைகள், தானியங்களை உடைத்தெடுக்கவும் இந்தத் திரிகை இயந்திர கல்தான் பயன்படுத்தப்பட்டு வந்தது.

திரிகல் வடிவம் :  வட்டவடிவில் இரண்டு கருங்கற்கள் குடைந்து வைக்கப்பட்டிருக்கும். ஒன்று நகர முடியாதபடி அடி கனத்து இருக்கும். மேல் கல் சற்று கனம் குறைந்து காணப்படும். மேல் கல்லில் கைப்பிடி அமைப்பதற்கு ஒரு சிறு துளை இருக்கும். அத்துளையில் மரக்கொம்பினால் ஆன கைப்பிடி பொருத்தப்பட்டிருக்கும். சுத்தியல் கொண்டு அக்கொம்பை இறுக்கமாக அடித்து வைத்திருப்பார்கள். அப்பொழுதுதான் சுழற்றும் போது குச்சி கையோடு வராது.

மேல் கல்லையும், கீழ் கல்லையும் நடுவில் சிறிய அச்சு (குச்சு ) ஒன்று இணைக்கும். எந்திரத்தை சுழற்றும் போது விலகிப்போகாமல் இருக்கவும் அந்த அ(கு)ச்சு உதவும். மேல் கல்லில் உள்ள வாய் அகன்ற துளையின் வழியாக தானியங்களை சிறிது சிறிதாக போட்டு கல்லை சுற்றுவார்கள். சுற்றும் போது, தானியங்கள் அரை பட்டு, மாவு பொருட்கள் கல்லைச் சுற்றி விழும். இந்த முறையில்தான் அரிசி மாவு, கேழ்வரகு மாவு போன்றவற்றை அரைத்தார்கள்.

மேலும் துவரை, காராமணி போன்ற பயறுகளை இதில் போட்டுத்தான் பருப்பாக உடைத்தார்கள். இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சிறுதானியங்களின் களஞ்சியம் என்று பெயர் பெற்ற சிவரக்கோட்டை கிராமத்தில் தற்போது மானாவாரி பயிர்கள் மற்றும் சிறு தானியங்களின் விளைச்சல் அமோகமாக உள்ளது. இதனால் சிவரக்கோட்டை பகுதியிலுள்ள அனைத்து சாலைகளும் கதிரடிக்கும் களஞ்சியங்களாக காட்சியளிக்கிறது.காற்று இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி தானியங்களை காற்றில் தூவி பதறடிக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

தற்போது அறுவடை முடிந்து மூடை மூடையாக வரும் தானியங்களை வீட்டிலுள்ள விவசாய டெக்னிக் தெரிந்த பெண்மணிகள் இயந்திரங்களை தேடி அலைந்திடாமல் இயற்கையின் கொடையான திரிகையை மகிழ்வுடன் பயன்படுத்தி வருகின்றனர். கால தாமதம்  ஆயினும் கரங்கள் சோர்ந்து போயினும் விடாது திரிகையை சுழற்றி தானியங்களை அரைத்தும் உடைத்தும் வருகின்றனர்,

இயற்கையான முறையில் திரிகையில் அரைக்கப்படும் தானிய வகைகளில் சத்துக்கள் எதுவும் குறைந்திடாமல் இருப்பதால் இதனை வாங்கிச் சென்றிட இயற்கை ஆர்வலர்கள் சிவரக்கோட்டை கிராமத்திற்கு படையெடுத்து வருகின்றனர். இயற்கையின் கருணையால் பெருகிய விளைச்சலை இயற்கையான முறையில் திரிகை கொண்டு திரித்து விற்பனை செய்வதால் இந்த கிராமத்தின் பொருளாதாரம் உயர்ந்து சிவரக்கோட்டை சிங்காரக் கோட்டையாக மாறி வருகிறது என்பதே நிஜம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து