சென்னை : சென்னையில் நேற்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 224 குறைந்து ஒரு சவரன் ரூ. 28,672-க்கு விற்பனையானது.
தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி மற்றும் சர்வதேச சந்தையில் ஏற்பட்ட மாற்றம் ஆகியவை காரணமாக ஆபரண தங்கத்தின் விலை கடந்த ஒரு மாதத்துக்கு மேல் உயர்ந்த வண்ணமாய் இருந்தது. கடந்த 4-ம் தேதி காலை தங்கம் விலை வரலாறு காணாத வகையில் ரூ. 30 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை எட்டியது. இது சாதாரண மற்றும் ஏழை மக்களை கவலையில் ஆழ்த்தியது. அன்று மாலையே ரூ. 30 ஆயிரத்தில் இருந்து கீழ் இறங்கி ரூ. 29,928-க்கு வந்தது. கடந்த 6-ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு அதிரடியாக ரூ. 664 குறைந்தது. மறுநாள் ரூ.104 உயர்ந்தது. அதற்கு அடுத்த நாள் அதே நிலையில் நீடித்தது. கடந்த 9-ம் தேதியில் இருந்து தங்கம் விலை படிப்படியாக சரிய தொடங்கியது. இதனால் ரூ. 29 ஆயிரத்துக்கு கீழே இறங்கியது. நேற்று தங்கம் விலை மீண்டும் குறைந்தது. நேற்று காலை கிராமுக்கு ரூ. 28 குறைந்து ரூ.3,584-க்கு விற்பனையானது. பவுன் ரூ. 224 குறைந்து ரூ. 28,672 ஆக இருந்தது. கடந்த 10 தினங்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1498 சரிந்து உள்ளது. இதே போல வெள்ளி விலையும் தொடர்ந்து சரிந்துள்ளது. ஒரு கிராம் ரூ.48.70 ஆகவும், ஒரு கிலோ ரூ.48,700 ஆகவும் உள்ளது.