ராஜ்கோட்: குஜராத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை ஒன்றில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பலியாகி உள்ளனர். பலியானவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
குஜராத்தின் ராஜ்கோட் நகரில் உள்ள சிவானந்த் என்ற மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி 5 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் உடனடியாக தெரிய வரவில்லை. இந்த சம்பவம் பற்றி விசாரணை மேற்கொள்ளும்படி அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி உத்தரவிட்டு உள்ளார்.
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ராஜ்கோட்டில் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் பற்றி செய்தியறிந்து ஆழ்ந்த துயரடைந்தேன். இந்த துரதிருஷ்டவச சோக சம்பவத்தில் தங்களது அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் துயர நினைவுகளில் நானும் பங்கு கொள்கிறேன்.
இந்த தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைந்து திரும்ப வேண்டும் என இறைவனை வேண்டி கொள்கிறேன். இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து சாத்தியப்பட கூடிய உதவிகளையும் அரசு நிர்வாகம் உறுதிப்படுத்தும் என கூறியுள்ளார்.