பிரிஸ்பேன் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதை அடுத்து சாம்பியன் கோப்பையை பெற்ற ரஹானே, நடராஜனை அழைத்து கோப்பையை வழங்கி அழகு பார்த்தார்.
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றது. ஷுப்மான் கில் (91), ரிஷப் பண்ட் (89 அவுட் இல்லை) ஆகியோரின் சிறப்பான பேட்டிங்கால் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 329 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதன்மூலம் உலக டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி2-வது இடத்திற்கு முன்னேறியது. அதே நேரத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
வெற்றி பெற்ற இந்திய அணிக்கு ஆலன் பார்டர் - சுனில் கவாஸ்கர் வெற்றிக் கோப்பை வழங்கப்பட்டது. கோப்பையை இந்திய அணி கேப்டன் ரஹானே பெற்றுக் கொண்டார். அதை பெற்றுக்கொண்ட ரஹானே நடராஜனை அழைத்து கோப்பையை ஏந்தும்படி கேட்டுக் கொண்டார்.
அதன்படி நடராஜன் கோப்பையை ஏந்தி நிற்க இந்திய அணி வீரர்கள் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டனர். இந்தத் தொடரில் அறிமுகமாகி சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்திய நடராஜனிடம் ரஹானே கோப்பையை ஏந்தச் சொன்னது மெய்சிலிர்க்க வைத்தது.