முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இனி ரூபிள்-ரூபாயில் பரிவர்த்தனை: இந்தியா வரும் ரஷ்யாவின் முதல்தர கச்சா எண்ணெய் !

வெள்ளிக்கிழமை, 1 ஏப்ரல் 2022      இந்தியா
India-Russia 2022 04 01

இந்தியாவுக்கு முதல் தரமான கச்சா எண்ணெயில் பீப்பாய் ஒன்றுக்கு 35 டாலர்கள் தள்ளுபடி விலையில் வழங்க ரஷ்யா முன் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுமட்டுமின்றி டாலர்கள் இல்லாமல் ரூபிள்- ரூபாயில் பரிவர்த்தனை செய்யவும் ரஷ்யா தயாராக உள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. உக்ரைன் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்தார். ரஷ்யாவின் கச்சா எண்ணெயை வாங்க அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மறுத்துள்ளதால் மலிவு விலையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்ய ரஷ்யா முன் வந்துள்ளது.

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவும் ஆயத்தம் ஆகி வருகிறது. முதல்கட்டமாக 30 லட்சம் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் வாங்க இந்தியன் ஆயில் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போது செய்யப்படும் ஒப்பந்தம் தொடர்பாக புதிக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி போருக்கு முந்தைய விலையில் ஒரு பீப்பாய்க்கு 35 டாலர்கள் வரை தள்ளுபடியில் முதன்மையான உரல்ஸ் தரத்திலான கச்சா எண்ணெயை இந்தியாவிற்கு ரஷ்யா விற்பனை செய்கிறது.

இந்தியா-ரஷ்யா பேச்சுவார்த்தையில் முக்கியமாக பண பரிவர்த்தனை தொடர்பாக பேசப்பட்டுள்ளது. டாலர் இல்லாமல் ரூபிள்- ரூபாய் மதிப்பில் பரிவர்த்தனை செய்யப்படும். அதாவது வர்த்தகத்தில் இந்தியா தரப்பில் ரூபாயிலும், ரஷ்யா தரப்பில் ரூபிளும் செலுத்தப்படும். இதனை ரஷ்யா ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்ததாவது., உக்ரைன் படையெடுப்பைத் தொடர்ந்து சர்வதேச அழுத்தம் அதிகரித்து வருவதால் இந்தியாவிற்கு எண்ணெய் நேரடி விற்பனையில் அதிக தள்ளுபடியை வழங்க ரஷ்யா தயாராக உள்ளது. பொருளாதாரத் தடைகளால் பாதிக்கப்பட்டுள்ள ரஷ்யா ஏற்றுமதியை உயர்த்துவதற்காகவும் இந்தியாவைக் கவர்ந்திழுக்கவும் போருக்கு முந்தைய விலையில் ஒரு பீப்பாய்க்கு 35 டாலர்கள் வரை தள்ளுபடியில் அந்நாட்டின் முதல் தரமான உரல்ஸ் கச்சா எண்ணெயை இந்தியாவிற்கு வழங்குகிறது.

ஹெட்லைன் ப்ரெண்ட் விலை அப்போதிருந்து சுமார் 10 டாலர்கள் உயர்ந்துள்ளன. எனவே இப்போதைய சந்தை விலையை ஒப்பிட்டால் மொத்தமாக 40 டாலர்கள் மதிப்பில் குறைவான விலையில் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் கிடைக்க வாய்புள்ளது. அந்த ஒப்பந்தத்தில் கச்சா எண்ணெய் விலை தற்போதைய நிலையில் விற்கப்படும் விலையை மையப்படுத்தி தள்ளுபடி உறுதி செய்யப்பட்டாலும், விலை அதிகரிக்கும்போது இதில் மாற்றம் இருக்கலாம். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த ஆண்டுக்கான ஒப்பந்தம் செய்யப்படுவதன்படி 15 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெயை ரஷ்யாவிடம் இருந்து இந்தியா வாங்க வேண்டும். ஆசியாவின் நம்பர் 2 கச்சா எண்ணெய் இறக்குமதியாளரான இந்தியா இதன் மூலம் பெருமளவு பயனடைய வாய்ப்புள்ளது. உக்ரைன் படையெடுப்பைத் தொடர்ந்து ஐரோப்பா மற்றும் அமெரிக்கா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய், எரிவாயு வாங்குபவதை தவிர்ப்பதால் ரஷ்யா ஆசியாவிற்கு அதிக அளவில் விற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதனால் ரஷ்யாவிடம் அதிகமான கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளாக சீனாவும், இந்தியாவும் உள்ளன.

ரஷ்யாவின் மெசேஜிங் சிஸ்டம் மூலம் ரூபாய்- ரூபிள் மதிப்பில் இந்த பரிவர்த்தனை நடைபெறுகிறது. டாலருக்கு மாற்றாக ரஷ்யாவுடன் இந்தியா இதுபோன்ற பரிவர்த்தனையில் ஈடுபடுகிறது. ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இரண்டு நாள் பயணமாக இந்தியா வரவுள்ள நிலையில் அப்போது இந்த பரிவர்த்தனை விஷயம் இறுதி செய்யப்படும் எனத் தெரிகிறது. பிரைன்ட் கச்சா எண்ணெய் விலை நேற்று பீப்பாய் 103.3 டாலர்களாக உள்ளது. எம்சிஎல் கச்சா எண்ணெய் 99.14 டாலர் என்ற அளவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து