Idhayam Matrimony

சலசலப்புகளுக்கு மத்தியில் ஓ.பி.எஸ் . - இ.பி.எஸ். பங்கேற்பு: தீர்மானங்கள் ஏதும் நிறைவேறாமலேயே முடிந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம்

வியாழக்கிழமை, 23 ஜூன் 2022      அரசியல்
Admk-2022-06-23

பரபரப்பான சூழ்நிலையில் சென்னை வானகரத்தில் நேற்று நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். பங்கேற்றனர். சென்னை ஐகோர்ட் அமர்வு உத்தரவுப்படி தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றப்படாமல் அரைமணி நேரத்தில் கூட்டம் முடிந்தது.

11.30 மணிக்கு... 

அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழுக்கூட்டம் சென்னை வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. காலை 10 மணிக்கு தொடங்க வேண்டிய பொதுக்குழுக் கூட்டம் காலை 11.30 மணிக்கு தொடங்கியது. பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் மண்டப மேடையில், வைக்கப்பட்டிருந்த பேனரில், கட்சியின் நிறுவனத் தலைவர் எம்ஜிஆர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியின் படங்கள் இடம்பெற்றிருந்தன.மேலும் மேடையில் போடப்பட்டிருந்த இருக்கைகளில், அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமர்ந்திருந்தனர்.

உற்சாக வரவேற்பு... 

பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, கிரின்வோஸ் சாலையில் உள்ள தனது இல்லத்திலிருந்து காலை 8 மணிக்கு புறப்பட்டார். அவருக்கு வழிநெடுகிலும், அ.தி.மு.க. தொண்டர்கள் மலர்களை தூவி, கோஷங்களை எழுப்பி உற்சாக வரவேற்பு அளித்தனர். ஏறக்குறைய 3 மணி பயணத்திற்கு பின்னர், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பொதுக்குழு நடக்கும் திருமண மண்டபத்தை வந்தடைந்தார். அப்போது கட்சியின் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் எழுந்து நின்று அவரை வரவேற்றனர்.

ஒரே மேடையில்...

கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் திருமண மண்டபத்திற்கு எடப்பாடி பழனிசாமிக்கு முன்பாகவே வந்துவிட்டார். அவரது வருகையின்போது, எடப்பாடியார் வாழ்க, ஒற்றைத் தலைமை வேண்டும் என்பது உள்ளிட்ட கோஷங்கள் எழுப்பப்பட்டுதால், அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் மேடையில் ஒருபுறம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், மறுபுறம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அமர, இருவருக்கும் நடுவில், கட்சியின் தற்காலிக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் அமர்ந்திருந்தார்.

அவைத் தலைவராக...

ஒற்றைத் தலைமை விவகாரத்தில் உச்சகட்ட சலசலப்புகளுக்கு மத்தியில், அதிமுக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களால் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். மேடையில் வைக்கப்பட்டிருந்த கட்சியின் நிறுவனத் தலைவர் எம்ஜிஆர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படங்களுக்கு ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர். கூட்டத்தை நடத்தி தருமாறு ஓபிஎஸ் முன்மொழிய, இபிஎஸ் வழிமொழிந்தார். அப்போது மேடையில் பேசிய மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம், அனைத்து தீர்மானங்களையும் இந்த பொதுக்குழு நிராகரிக்கிறது, நிராகரிக்கிறது, நிராகரிக்கிறது என்று கூறினார். இதனால் சலசலப்பு ஏற்பட்டது.

ஒற்றை தலைமை... 

இனைத் தொடர்ந்து பேசிய சி.விசண்முகம், " இரட்டை தலைமையால் திமுகவை எதிர்த்து செயல்பட முடியாத நிலை உள்ளது. இரட்டை தலைமையின் செயல்பாட்டில் ஒருங்கிணைப்பு இல்லை. எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலிலதா போன்று ஒற்றை தலைமை ஏற்பட வேண்டும். எனவே பொதுக் குழுவில் இரட்டை தலைமை ரத்து செய்து விட்டு ஒற்றை தலைமை குறித்து விவாதிக்க வேண்டும். அடுத்து பொதுக்குழு தேதியை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

இதன்பிறகு பேசிய அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், ஜூலை 11-ம் தேதி அடுத்த பொதுக்குழு மற்றும் செயற்குழு நடைபெறும் என்று அறிவித்தார். இதன் பின்னர் நேற்று நடந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நிறைவு பெறுவதாக அறிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து