முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் யானை உயிரிழப்பு : கவர்னர் தமிழிசை நேரில் அஞ்சலி

புதன்கிழமை, 30 நவம்பர் 2022      இந்தியா
Tamilsai 2022-11-30

Source: provided

புதுவை : உயிரிழந்த புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் யானையின் உடலுக்கு ஆளுனர் தமிழிசை சவுந்திரராஜன் நேரில் அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் லட்சுமியின் இழப்பை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என கூறினார். 

புதுவையில் புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு புதுவை முதல்வராக  ஜானகிராமன் இருந்த போது கடந்த 1997-ம் ஆண்டு யானை ஒன்று தனியார் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டது. அந்த யானைக்கு லட்சுமி என்று பெயர் சூட்டப்பட்டது. லட்சுமி யானை நாள்தோறும் கோவிலுக்கு வந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்தது. 

இந்த நிலையில் யானை லட்சுமி நேற்று காலை வழக்கம் போல் காமாட்சி அம்மன் கோவில் வீதியில் நடைபயிற்சிக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளது. அப்போது திடீரென மயங்கி விழுந்த லட்சுமி, சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தது. புதுவை மணக்குள விநாயகர் கோவிலில் 25 ஆண்டுகளாக பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்த யானை லட்சுமி உயிரிழந்த சம்பவம் பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதை தொடர்ந்து கோவில் வளாகத்தில் யானை லட்சுமியின் உடல் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது. பின்னர் மாலை யானையின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதல் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் உயிரிழந்த யானை லட்சுமிக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுனர் தமிழிசை சவுந்தரராஜன் நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது, 

லட்சுமியின் இழப்பு ஒவ்வொரு வீட்டிலும் ஏற்பட்ட இழப்பு போன்றது. லட்சுமி இல்லாமல் கோவிலுக்கு வருவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. லட்சுமி உயிரிழந்தது அதிர்ச்சியான செய்தியாகும். தங்கத்தேர் கோவிலில் வரும் போது தேர் போல வழிநடத்தி செல்வாள் லட்சுமி. லட்சுமியின் இழப்பை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து