முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாண்டஸ் புயலால் கனமழை எச்சரிக்கை: 10 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இரவு நேர அரசு பஸ்கள் இயங்காது எனவும் அறிவிப்பு

வியாழக்கிழமை, 8 டிசம்பர் 2022      இந்தியா
Boat 2022-12-08

Source: provided

சென்னை: மாண்டஸ் புயல் மற்றும் கன மழை எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, பெரம்பலூர் ஆகிய 10 மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (டிச.9) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் அந்த 10 மாவட்டங்களில் இன்று இரவு நேர அரசு பேருந்துகள் இயங்காது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாண்டஸ் புயல் தற்போது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் சென்னைக்கு தென்கிழக்கில் சுமார் 550 கி.மீட்டர் தொலைவிலும், காரைக்காலுக்கு கிழக்கு தென்கிழக்கில் சுமார் 460 கி.மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. இதுதொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகரக்கூடும். தற்போதைய நிலவரப்படி வெள்ளிக்கிழமை (டிச.9) இரவு கரையைக் கடக்கக்கூடும். இதன் காரணமாக 8, 9, 10 தேதிகளில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

வானிலை மையத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து புயல் மற்றும் கனமழை தொடர்பாக செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலர் வியாழக்கிழமை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கும்படி மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலர் அறிவுறுத்தியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, திருப்பத்தூர், பெரம்பலூர்  ஆகிய 10 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை (டிச.9) விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் அந்த 10 மாவட்டங்களில் இன்று இரவு நேர அரசு பேருந்துகள் இயங்காது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து