முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செங்கல்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம்: முதல்வர் அறிவிப்பு

திங்கட்கிழமை, 6 பெப்ரவரி 2023      தமிழகம்
Stalin 2020 07-18

Source: provided

சென்னை : சிறுவர் சீர்திருத்த பள்ளியில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவியும், அரசு குடியிருப்பில் ஒரு வீடு ஒதுக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், 

செங்கல்பட்டு அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் தங்கியிருந்த சிறுவன் செல்வன் கோகுல்ஸ்ரீ 31-12-2022 அன்று மரணமடைந்ததைத் தொடர்ந்து, சிறுவனின் தாயார் பிரியாவுக்கு இழப்பீடாக 7.5 லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து நிதியுதவியாக ரூ. 2.5 லட்சம் ரூபாயும் என மொத்தம் 10 லட்சம் ரூபாய் வழங்கி முதல்வர் ஆணையிட்டுள்ளார்.  மேலும், இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கூர்நோக்கு இல்ல அலுவலர்கள் ஆறு பேர் மீது வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தில் உயிரிழந்த சிறுவனின் தாயார் பிரியாவுக்கு தமிழ்நாடு நகரப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் வட்டம், அன்னை அஞ்சுகம் நகர் திட்டப் பகுதியில் தற்போது கட்டப்பட்டு முடிவுறும் நிலையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளில் ஒரு குடியிருப்பினை ஒதுக்கீடு செய்யவும் முதல்வர் ஆணை பிறப்பித்துள்ளார்.

இளைஞர் நீதி அமைப்பின் கீழ் செயல்பட்டுவரும் கூர்நோக்கு இல்லங்கள், சிறப்பு இல்லங்கள் மற்றும் பாதுகாப்பு இல்லங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் மற்றும் நிர்வாகத் திறன்களை மேம்படுத்தும் பொருட்டு, சென்னை ஐகோர்ட் ஓய்வு பெற்ற நீதியரசர் தலைமையில், ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப்பணி அதிகாரி மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் சார்பாக ஒரு பிரதிநிதியும் உள்ளடக்கிய உயர்மட்டக் குழு ஒன்று உருவாக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து