முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீதான விவாதம்: ஓ.பன்னீர்செல்வம் பேசியதற்கு எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு சட்டசபையில் சலசலப்பு - அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு

வியாழக்கிழமை, 23 மார்ச் 2023      தமிழகம்
Ops-2023-03-23

Source: provided

சென்னை: ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீதான விவாதத்தில் ஓ.பி.எஸ். பேசியதற்கு இ.பி.எஸ் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் இதை தொடர்ந்து ஏற்பட்ட சலசலப்பை அடுத்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா நேற்று (மார்ச் 23) சட்டப்பேரவையில் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது. இதன்படி, முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை தாக்கல் செய்து பேரவையில் பேசினார். இதன் மீது, தமிழக வாழ்வுரிமை கட்சி எம்எல்ஏ வேல்முருகன், கொமதேக எம்எல்ஏ ஈஸ்வரன், மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ., ஜவாஹிருல்லா, சிபிஎம் எம்.எல்.ஏ., நாகை மாலி, பாஜக குழுத்தலைவர் நயினார் நாகேந்திரன், பாமக குழுத்தலைவர் ஜி.கே.மணி, காங்கிரஸ் குழுத்தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர் செல்வம், அ.தி.மு.க. சார்பில் தளவாய் சுந்தரம் ஆகியோர் பேசினர்.

அப்போது பன்னீர்செல்வம் பேசுகையில், ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவிற்கு அ.தி.மு.க. சார்பில் வரவேற்பை தெரிவித்துக்கொள்கிறேன் என பேசினார். இதனால் கோபமடைந்த எடப்பாடி பழனிசாமி, ஒவ்வொரு கட்சி சார்பில் ஒருவரை பேச அனுமதித்துவிட்டு, அ.தி.மு.க. சார்பில் இரண்டாவதாக ஓ.பன்னீர்செல்வத்தை பேச அனுமதித்தது ஏன் என சபாநாயகரை நோக்கி கேள்வியெழுப்பினார்.

ஓ.பி.எஸ்.-க்கு பேச வாய்ப்பளித்ததை கண்டித்து  அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பு எம்எல்ஏக்களும் ஓ.பி.எஸ். தரப்பு எம்எல்ஏக்களும் சபாநாயகர் இருக்கை அருகே சென்று முழக்கமிட்டனர். இதன் காரணமாக சட்டசபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

அப்போது ஓ.பி.எஸ். ஆதரவு எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியன் ஒரு கட்டத்தில் வேட்டியை மடித்து கட்டி அ.தி.மு.க. வினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஓ.பி.எஸ். தான் எதிர்க்கட்சி துணைத் தலைவர் என தெரிவித்தார். அது இன்னும் மாற்றப்படவில்லை என்று கூறினார்.தேர்தல் ஆணையத்திலும் அவர்தான் அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் என்ற பதிவு உள்ளது எனக் குறிப்பிட்டார்.மேலும் கடுமையாக விமர்சித்தார்.

ஓ. பன்னீர்செல்வத்தை பேச அனுமதித்ததை எதிர்த்து, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து முழக்கமிட்டனர். வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோர் இருக்கையை விட்டு எழுந்து செல்லவே, இ.பி.எஸ். ஆதரவு எம்எல்ஏக்களும் இருக்கை விட்டு எழுந்து சென்றனர். அவர்களை கே.பி. முனுசாமி சமாதானப்படுத்தினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய சபாநாயகர், பிரதான எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி தான், அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. மூத்த உறுப்பினர், முன்னாள் முதல்-அமைச்சர் என்ற அடிப்படையில்தான் ஓ.பி.எஸ்.க்கு அனுமதி வழங்கினேன் என்று தெரிவித்தார். 

அதற்கு பதில் அளித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, இது மரபை மீறிய செயல் அப்படி ஒரு விதி பேரவையில் இல்லை என்று அவர் குறிப்பிட்டார். இதனால் சிறிது நேரம் சட்டசபையில் சலசலப்பு ஏற்பட்டது.அதனை தொடர்ந்து அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து