முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்ற 5 கட்ட தேர்தலில் பதிவான வாக்கு விவரங்கள் தொகுதிவாரியாக வெளியீடு : முதன்முறையாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சனிக்கிழமை, 25 மே 2024      இந்தியா
Election 2024-03-29

Source: provided

புதுடெல்லி : பாராளுமன்ற மக்களவைக்கு நடந்து முடிந்த 5 கட்ட தேர்தலில், மாநிலம், தொகுதி வாரியாக எத்தனை பேர் ஓட்டுப் போட்டனர், எத்தனை சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளன போன்ற விவரங்களை முதன்முறையாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

குற்றச்சாட்டு...

பாராளுமன்ற மக்களவை தேர்தலில் பதிவான ஓட்டு சதவீதத்தை தேர்தல் ஆணையம் தாமதமாக வெளியிடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. 48 மணி நேரத்திற்குள் அதிகாரப்பூர்வ ஓட்டு சதவீதத்தை அறிவிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு நேற்று முன்தினம் ( மே 24) விசாரணைக்கு வந்த போது, சந்தேகத்தின் அடிப்படையிலும், அவநம்பிக்கை ஏற்படுத்தவே மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. சந்தேகம் எழுப்பி மனுக்களை தொடர்ந்து தாக்கல் செய்தால் ஓட்டளிக்க வருவதை குறைக்கும். தேர்தல் நடக்கும் காலத்தில் இதுபோன்ற மனுக்கள் எதையும் நீதிமன்றம் விசாரிக்கக்கூடாது என தேர்தல் ஆணையம் வாதிட்டது. இதனையடுத்து, தற்போதைய சூழ்நிலையில் மனுவை விசாரிக்க விரும்பவில்லை எனக்கூறி சுப்ரீம் கோர்ட் வழக்கை ஒத்தி வைத்து உள்ளது.

தேர்தல் ஆணையம்...

இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு மீதான சந்தேகத்துக்கு பதில் அளிக்கும் விதமாக, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலின்போது தொகுதிவாரியாக பதிவான வாக்குகள் குறித்த விவரங்களை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. முதல் 5 கட்ட தேர்தல்களின்போது பதிவான வாக்குகள் தொகுதிவாரியாக வழங்கப்பட்டுள்ளன. அதோடு, வாக்குப்பதிவு தரவுகளை வெளியிடும் இந்திய தேர்தல் ஆணையத்தின் செயல்முறை குறித்த சுப்ரீம் கோர்ட்டின்  தீர்ப்பால் ஆணையம் வலுப்பெற்றதாக உணர்கிறது என்றும் தேர்தல் ஆணையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சாத்தியமில்லை...

கடுமையான, வெளிப்படையான செயல்முறை காரணமாக பதிவான வாக்குகளின் எண்ணிக்கையில் மாற்றம் செய்வதற்கு சாத்தியமில்லை என்று குறிப்பிட்டுள்ள தேர்தல் ஆணையம், 543 பாராளுமன்றத் தொகுதிகளில் உள்ள சுமார் 10.5 லட்சம் வாக்குச்சாவடிகளில் பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கையை பதிவு செய்யும் படிவம் 17C, அனைத்து வேட்பாளர்களின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களிடமும் இருப்பதை அது சுட்டிக்காட்டியுள்ளது. படிவம் 17C இல் பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கையை மாற்ற முடியாது என்றும், ஏனெனில் அவை போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அனுமதிக்கப்படுவர்... 

தேர்தல் நடத்தை விதிகள் 1961ன் விதி 49 V (2)ன் படி, வாக்குப்பதிவு முடிந்த உடன் வாக்குச்சாவடியில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்ட்ராங் ரூமுக்குக் கொண்டு செல்லப்படும்போது, வேட்பாளர்கள் அல்லது வேட்பாளர்களின் முகவர்கள் உடன் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. மேலும், வாக்கு எண்ணிக்கையின்போது, வேட்பாளர் அல்லது அவரது முகவர்கள் 17C படிவத்தின் நகலை வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு வந்து ஒவ்வொரு சுற்றிலும் உள்ள முடிவுடன் ஒப்பிட்டுப் பார்ப்பார்கள் என்றும் அது குறிப்பிட்டுள்ளது. எனவே, வாக்கெடுப்பு நாளில் பகிரப்பட்ட வாக்குகளின் தரவை யாராலும் மாற்ற முடியாது என்பதை மீண்டும் வலியுறுத்துவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து