முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அரசு நடைமுறைப்படுத்த விரும்பும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் நோயை விட கொடுமையானது: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்

திங்கட்கிழமை, 9 மார்ச் 2026      தமிழகம்
CM 2024-05-31

சென்னை, மத்திய அரசு நடைமுறைப்படுத்த விரும்பும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் நோயை விட கொடுமையானது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் ஏன் நடைமுறைப்படுத்தக்கூடாது என்பதை புள்ளி விவரங்களுடன் அவர் விவரித்துள்ளார்.

மத்திய அரசு நடைமுறைப்படுத்த விரும்பும் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள கட்டுரையில் கூறப்பட்டு இருப்பதாவது;- ”2019ஆம் ஆண்டு, இந்தோனேஷியா ஜனாதிபதி, தேசிய மற்றும் பிராந்திய சட்டமன்றங்கள், மேலும் உள்ளாட்சி மன்றங்களுக்கு ஒரே நாளில் தேர்தலை நடத்தியது ஒரு வரலாற்றுச் சம்பவமாக அமைந்தது. செலவுகளைக் குறைத்து நிர்வாகத்தை எளிமைப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி, மனித உயிர்களின் பெரும் இழப்பை ஏற்படுத்தியது. சுமார் 900 தேர்தல் பணியாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 5,000க்கும் மேற்பட்டோர் கடுமையாக உடல்நலக் குறைவு அடைந்தனர்.

2025 ஜூன் மாதத்தில், இந்தோனேஷிய அரசியலமைப்பு நீதிமன்றம் 2029 முதல் தேசிய மற்றும் உள்ளாட்சி தேர்தல்கள் தனித்தனியாக இரண்டு முதல் இரண்டரை ஆண்டுகள் இடைவெளியில் நடத்தப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தது. வாக்காளர்கள் மற்றும் நிர்வாக அமைப்புகள் மீது ஏற்பட்ட அதிகப்படியான சுமையும், ஜனநாயகப் பங்கேற்பில் ஏற்பட்ட பாதிப்பும் இதற்குக் காரணமாகக் குறிப்பிடப்பட்டது.

இந்தியாவில் முன்வைக்கப்பட்டுள்ள ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முன்மொழிவை ஆதரிப்பவர்கள், லோக்சபா மற்றும் மாநில சட்டமன்றத் தேர்தல்களை ஒருங்கிணைப்பதன் மூலம் செலவுகளைக் குறைக்க முடியும், பாதுகாப்புப் படையினரின் நீண்டகால பணியமர்த்தலைத் தவிர்க்கலாம், தேர்தல் நன்னடத்தை விதிகள் நடைமுறை காரணமாக ஏற்படும் நிர்வாகத் தடைகளைக் குறைக்கலாம், மேலும், அரசியல் கட்சிகள் நிரந்தரப் பிரச்சார நிலைக்குத் தள்ளப்படுவதைத் தவிர்க்கலாம் என வாதிடுகின்றனர். எனினும், இந்தோனேஷியாவின் அனுபவம் ஒரு எச்சரிக்கை பாடமாகத் திகழ்கிறது.

ஒப்பீட்டு அரசியலமைப்பு நடைமுறைகளில், கட்டாயத் தேர்தல் ஒருங்கிணைப்பிற்குப் பெரிதாக ஆதரவு இல்லை. கனடாவில், கூட்டாட்சி மற்றும் மாகாணத் தேர்தல்கள் தனித்தனியாக நடைபெறுகின்றன. ஆஸ்திரேலியாவில் ஒருங்கிணைப்பு இயலாத ஒன்றாகும்: மாநில சட்டமன்றங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட காலம் நான்கு ஆண்டுகளாகும்; அதே நேரத்தில் கூட்டாட்சிப் பிரதிநிதிகள் சபையின் அதிகபட்ச பதவிக்காலம் மூன்று ஆண்டுகள் மட்டுமே.

ஜெர்மனி பெரும்பாலும் தவறாக மேற்கோள் காட்டப்படுகிறது. அங்கு நிலவும் அரசியல் நிலைத்தன்மை, ஒருங்கிணைந்த தேர்தல்களால் அல்ல — லேண்டர் மாநிலத் தேர்தல்கள் திட்டமிட்டே வெவ்வேறு காலங்களில் நடைபெறுகின்றன — மாறாக ஆக்கபூர்வமான நம்பிக்கையில்லாத் தீர்மானம் என்ற முறையால் உருவாகிறது. அதன்படி, சான்சலரை பதவியிலிருந்து நீக்குவதற்கு முன், புந்தெஸ்டாக் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

தென் ஆப்பிரிக்காவும் இந்தோனேஷியாவும் விகிதாசார பிரதிநிதித்துவ முறையைப் பயன்படுத்துகின்றன; இது அரசியல் அதிகாரத்தைப் பரவலாக்கி, சிறுபான்மையினரின் குரலைப் பாதுகாக்கிறது. இந்தியாவின் ‘அதிக வாக்குகள் பெறுபவரே வெற்றி பெறும் முறைமைக்கு இத்தகைய பாதுகாப்புகள் இல்லை; தேசிய அளவிலான ஒரு அரசியல் அலை மாநிலத் தேர்தல்களையும் முழுமையாகத் தாக்கக்கூடும். அமெரிக்கா வழங்கும் ஒப்புமையும் பலவீனமானதே: அங்கு நிர்ணயிக்கப்பட்ட தேர்தல் சுழற்சிகள் செயல்படுவதற்குக் காரணம், ஜனாதிபதி முறைமையில் நிர்வாகத்தின் பதவிக்காலம் சட்டமன்ற நம்பிக்கையிலிருந்து தனித்துவமாகப் பாதுகாக்கப்பட்டிருப்பதுதான்.

இந்த யோசனைக்கான மிக விரிவான வரைமுறை, முன்னாள் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் தலைமையில் (2023–24) செயல்பட்ட உயர்மட்டக் குழுவினால் முன்வைக்கப்பட்டது. இது தற்போது அரசியலமைப்பு (129வது திருத்தம்) மசோதா, 2024 என்ற சட்ட வடிவில் முன்னேறி வருகிறது. முன்மொழியப்பட்டுள்ள சரத்து 82ஏ படி, லோக்சபா தேர்தல் சுழற்சியுடன் அனைத்து மாநிலச் சட்டமன்றங்களின் பதவிக்காலங்களையும் ஒத்திசைக்க ஜனாதிபதிக்கு ஒரு “நியமிக்கப்பட்ட தேதி” அறிவிக்கும் அதிகாரம் வழங்கப்படுகிறது. அந்தத் தேதிக்குப் பின்னர் உருவாகும் மாநில சட்டமன்றங்களின் பதவிக்காலம், அவற்றின் ஐந்தாண்டு காலம் முடிவடையாதிருந்தாலும் குறைக்கப்படும்.

மேலும், இந்த மசோதா “எஞ்சிய பதவிக்காலத்திற்கான தேர்தல்” (unexpired-term elections) என்ற புதிய நடைமுறையையும் அறிமுகப்படுத்துகிறது: ஒரு சட்டமன்றம் முன்கூட்டியே கலைக்கப்பட்டால், புதியதாகத் தேர்ந்தெடுக்கப்படும் சட்டமன்றம் முழு ஐந்து ஆண்டு காலம் அல்லாமல், முந்தைய காலத்தின் மீதமுள்ள பகுதியை மட்டும் நிறைவேற்றும். கூடுதலாக, ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவது சாத்தியமற்றதாக

இருந்தால், மாநிலத் தேர்தல்களை ஒத்திவைக்க இந்திய தேர்தல் ஆணையத்துக்குப் பரிந்துரை செய்யும் அதிகாரமும் வழங்கப்படுகிறது. சட்டப்பிரிவு 83,172 மற்றும் 327 (சரத்துகள் 83, 172 மற்றும் 327) ஆகியவற்றிலும் திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. இவை தீவிரமான அரசியலமைப்புச் சிக்கல்களை எழுப்புகின்றன.

இந்தியா திட்டமிட்டே ஒரு பாராளுமன்ற முறைமையைத் தேர்ந்தெடுத்தது; இதில் அரசாங்கம் சட்டமன்றத்தின் நம்பிக்கையைத் தக்கவைத்திருக்கும் வரை மட்டுமே பதவியில் நீடிக்கும். அரசியலமைப்பு சபையில், டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஜனநாயகம் ஒரே நேரத்தில் நிலைத்தன்மையையும் பொறுப்பையும் அதிகபட்சமாக உறுதிசெய்ய முடியாது என்று விளக்கினார். இந்தியா நிலைத்தன்மையை விட பொறுப்புணர்வைத் தேர்ந்தெடுத்தது — நிர்வாகத்தின் தொடர்ச்சியான பொறுப்புணர்வு, உறுதியான பதவிக்காலத்தை விட மேலாகக் கருதப்பட்டது.

இந்த முன்மொழிவின் மிகக் கவலைக்கிடமான அம்சம், சட்டமன்றத்தின் மீதமுள்ள காலத்திற்கு மட்டும் தேர்தலை நடத்துவது என்பதாகும். அரசியலமைப்பு “மீதமுள்ள ஆணை” என்ற கருத்தை அங்கீகரிப்பதில்லை. முன்மொழியப்பட்டுள்ள சரத்து 83(6) மற்றும் 172(5) புதியதாகத் தேர்ந்தெடுக்கப்படும் அவை முந்தைய அவையின் தொடர்ச்சி அல்ல என்று கூறினாலும், தேர்தல் சுழற்சியை ஒருங்கிணைக்க முந்தைய கால அட்டவணையைத் தக்கவைத்துக் கொள்கின்றன. இதனால் பல சிக்கல்கள் உருவாகின்றன.

முதலில், இது வாக்குரிமையின் மதிப்பைக் குறைக்கிறது. நடுக்காலத் தேர்தல்கள் குறுகிய கால ஆணையைக் கொண்ட அரசுகளை உருவாக்கும்; தேர்தல்கள் இடைக்காலப் பயிற்சிகளாக மாறி, வாக்காளர்களின் அலட்சியத்தை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட ஒன்றியம்-மாநில உறவுகள் குறித்த நீதிபதி குரியன் ஜோசப் குழு, தனது அறிக்கையின் முதல் பகுதியில் (பிப்ரவரி 2026) இந்த மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது — இந்த நிலைப்பாட்டை தமிழ்நாடு அரசும் ஏற்றுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல்’ முன்மொழிவால் வாக்குறுதி அளிக்கப்படும் நன்மைகள் மிகைப்படுத்தப்பட்டவை; ஆனால், அதன் கட்டமைப்பு பாதிப்புகள் ஆழமானவை. இது அரசியலமைப்பின் அடையாளத்தையே மாற்றி, அடிப்படை அமைப்புக் கொள்கையை மீறுகிறது. இந்தியா இந்தோனேஷியாவின் தவறை மீண்டும் செய்யக்கூடாது. இவ்வாறு அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து