முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வேட்பு மனுத்தாக்கல்

வெள்ளிக்கிழமை, 25 மார்ச் 2011      அரசியல்
Image Unavailable

திருச்சி, மார்ச் 25 - அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரம் மற்றும் திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்காக நேற்று காலை சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு காலை 9.15 மணிக்கு திருச்சி வந்தடைந்தார், விமான நிலையத்தில் ஜெயலலிதாவை திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் மனோகரன், திருச்சி எம்.பி. குமார் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் பலரும் வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு திருச்சி சங்கம் ஓட்டலுக்கு ஜெயலலிதா வந்தார். விமான நிலையத்திலிருந்து சங்கம் ஓட்டல் வரை அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் தோழமைக் கட்சித் தொண்டர்கள் கையில் கொடியேந்தி சாலையின் இருபுறங்களிலும் நின்று உற்சாக வரவேற்பளித்தனர்.

சிறிதுநேர ஓய்வுக்குப்பின் ஜெயலலிதா, காரில் திருச்சி பழைய கலெக்டர் அலுவலகத்திற்கு புறப்பட்டார்.  அவரை சங்கம் ஓட்டலில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை அ.தி.மு.க.வினர், தோழமைக் கட்சித் தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் வரவேற்றனர். 10.58 மணிக்கு கலெக்டர் அலுவலகத்திற்கு ஜெயலலிதா வந்தார். அதைத்தொடர்ந்து 11.02 மணிக்கு தேர்தல் அதிகாரியான நிலச் சீர்திருத்தத்துறை துணை ஆணையர் குணசேகரன் ஜெயலலிதாவை வரவேற்றார். அங்கிருந்த ஊழியர்களும் வணக்கம் தெரிவித்து வரவேற்றனர். பின்பு வேட்பு மனுத்தாக்கலுக்கான மனுவில் ஜெயலலிதா கையெழுத்திட்டார். 

பின் தேர்தல் அதிகாரி  முன்னிலையில் ஜெயலலிதா உறுதிமொழி எடுத்துக் கொண்டார். அதைத் தொடர்ந்து தேர்தல் அதிகாரி குணசேகரனிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ. பரஞ்சோதி, திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் மனோகரன், சசிகலா உடனிருந்தனர்.

சுமார் 15 நிமிடங்கள் அங்கிருந்த ஜெயலலிதா வேட்பு மனுத்தாக்கல் முடிந்த பின்பு சங்கம் ஓட்டலுக்குப் புறப்பட்டார். அப்போது அங்கிருந்த ஆயிரக்கணக்கான அ.தி.மு.க.வினர் மற்றும் தொண்டர்கள் ஜெயலலிதா வாழ்க எனக் கோஷமிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்