முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெப்ஸி பேச்சு வார்த்தை - இராவூத்தர் அணி பங்கேற்பு

செவ்வாய்க்கிழமை, 24 ஏப்ரல் 2012      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஏப்.24 - திரைப்பட தொழிலாளர்களின் ஊதிய பிரச்சனையின் பேச்சு வார்த்தை தொழிலாளர் நல ஆணையர் முன்னிலையில் புதிய அமைப்பான அட்ஹாக் கமிட்டியின் தலைவர் இப்ராஹிம் இராவூத்தர் தலைமையில் மீண்டும் நடக்க உள்ளது. கடந்த சில மாதங்களாக சினிமா தொழிலாளர்களுக்கும் பட தயாரிப்பாளர்களும் ஊதிய பிரச்சனை ஏற்பட்டு வந்தது. இந்த பிரச்சனைக்கு முடிவு கிடைக்காததால் பெப்ஸி அமைப்பினருக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இதனால் தயாரிப்பாளர் சங்கத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரன் தலைமையில் ஒரு அணியும். புதிய அமைப்பான அட்ஹாக் கமிட்டியின் தலைவர் இப்ராஹிம் இராவூத்தர் தலைமையில் ஒரு அணியும் உருவானது.

தற்போது அரசு சார்பில் தொழிலாளர் நல ஆணையர் முன்னிலையில் மீண்டும் முத்தரப்பு பேச்சு வார்த்தை வரும் 25 -ம் தேதி நடக்க உள்ளன. இந்த பேச்சு வார்த்தையில் அ.செ.இப்ராஹிம் இராவூத்தர் அணியினர் பங்கேற்க உள்ளார்கள் இது குறித்து இப்ராஹிம் இராவூத்தர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விபரம் வருமாறு:-

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் கடந்த 15.04.2012 அன்று அவசர பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் 250 -க்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டனர். அதில், 10.04.2012 அன்று தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழுவில் அமைக்கப்பட்ட அட்ஹாக் கமிட்டிக்கும் அதன் தலைவராக அ.செ.இப்ராஹிம் இராவூத்தர் ஆகிய நான் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும் முழு ஒப்புதலை சங்கத்தினர்கள் அனைவரும் தந்தனர்.

பொதுக்குழுவின் முடிவுகள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பார்வைக்கும் அனுப்பப்பட்டன. தொழிலாளர்கள் நலத்துறை அமைச்சர் செல்லபாண்டியன் அட்ஹாக் கமிட்டிக்கு தனது அங்கீகாரத்தை அளித்து அட்ஹாக் கமிட்டி தலைவர் அ.செ.இப்ராஹிம் இராவூத்தர் தலைமையில் தொழிலாளர்கள் சம்மேளனத்துடன் பேச்சு வார்த்தை தொடரும் என்று அறிவித்துள்ளார். இதன்படி வரும் ஏப்ரல் 25-ம் தேதி (புதன்கிழமை) மாலை 3.30 -மணிக்கு தொழிலாளர் துறை ஆணையர் சந்திரமோகன் ஐஅந முன்னிலையில் முத்தரப்பு பேச்சு வார்த்தை தொடர உள்ளது.

திரையுலக பிரச்சனைகளை சுமூகமாக தீர்த்து வைக்க முயற்சி எடுத்து வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மற்றும், தொழிலாளர் நலத்துறை ஆணையத்திற்கும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். 

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்