முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுரங்க ஊழல்: பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் அமளி

வெள்ளிக்கிழமை, 7 செப்டம்பர் 2012      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி. செப்.7 - நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் ஏற்படுத்திய கடும்  அமளி காரணமாக பாராளுமன்றம் நேற்று  12 வது நாளாக முடக்கப்பட்டது. நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் மத்திய  அரசுக்கு ரூ.1.86 லட்சம் கோடிக்கு  இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய கணக்கு தணிக்கை குழு தனது  அறிக்கையில் சுட்டிக்காட்டியதை அடுத்து பெரும்  அரசியல் புயல் கிளம்பியது.

இந்த ஊழலுக்கு பொறுப்பேற்று பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும் என்று பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த பிரச்சினை காரணமாக கடந்த 11 நாட்களாக  பாராளுமன்றம் முடக்கப்பட்ட நிலையில்  பாராளுமன்றத்தின் லோக்  சபை நேற்று  காலை  கூடியது.

அப்போது பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலகியே  தீர வேண்டும் என்று  எதிர்க்கட்சி எம்.பி.க்கள்  கோரிக்கை விடுத்தனர்.

அவர்கள் சபையின் மையப்பகுதிக்கு சென்று  பிரதமர் மன்மோகன்  சிங்  பதவி விலக வேண்டும் என்று கோஷமிட்டனர்.இதனால் கேள்வி நேரத்தை  நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

இதனால்  சபையை சபாநாயகர் மீரா குமார் நண்பகல்  12 மணி வரை ஒத்திவைத்தார்.

அதன் பிறகு  மீண்டும் சபை  கூடிய போதும் பா.ஜ.க.  எம்.பி.க்கள் இதே பிரச்சினயை முன்வைத்து அமளியில் ஈடுபட்டனர். 

இதை அடுத்து துணை சபாநாயகர் கரிய முண்டா  சபையை நேற்று நாள் முழுவதுமாக ஒத்திவைத்தார்.

இதே போல ராஜ்ய  சபையிலும் பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள்  நிலக்கரி  சுரங்க ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். 

இதனால்  ராஜ்ய சபை  முதலில் நண்பகல் 12 மணி வரை  ஒத்திவைக்கப்பட்டது.

பிறகு சபை மீண்டும் கூடிய போதும்  எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இதே பிரச்சினையை கிளப்பி  பிரதமர் மன்மோகன் சிங்  பதவி விலக வேண்டும் என்று கோரி கோஷங்களை எழுப்பினர்.

இதை  அடுத்து  ராஜ்ய சபை  பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

மீண்டும் 2 மணிக்கு  சபை  கூடிய போது பா.ஜ.க.  உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள்  கடும் அமளியில் ஈடுபட்டாதல்  சபை நேற்று நாள் முழுவதுமாக ஒத்திவைக்கப்பட்டது.

நேற்று 12 வது  நாளாக  பாராளுமன்றம் எந்த அலுவல்களையும் நடத்தாமல்  முடங்கியது.

பாராளுமன்றத்தின்  மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்