முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலக்கரி முறைகேடு: பிர்லா மீது சி.பி.ஐ. வழக்கு

செவ்வாய்க்கிழமை, 15 அக்டோபர் 2013      வர்த்தகம்
Image Unavailable

 

புது டெல்லி, அக். 16 - நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பாக தொழில் அதிபர் கே.எம். பிர்லா மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது. 

மத்திய அரசு நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாகவும், இதனால் அரசுக்கு ரூ. ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடிக்கு இழப்பு ஏற்பட்டதாகவும் கணக்கு தணிக்கை துறை குற்றம் சாட்டியது. இது பற்றி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பான முக்கிய பைல்கள் மாயமாகி விட்டது. இதற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்ததுடன் மாயமான பைல்களை கண்டுபிடிக்கவும் உத்தரவிட்டது. அதன்படி சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் சி.பி.ஐ. சோதனையிட்டு சில பைல்களை மீட்டது. என்றாலும் முக்கியமான பைல்கள் கிடைக்கவில்லை. 

இந்த விவகாரம் பாராளுமன்றத்தில் பெரும் புயலை கிளப்பியதால் மழைக்கால கூட்டத் தொடர் பாதிக்கப்பட்டது. பிரதமர் மன்மோகன்சிங் பாராளுமன்றத்தில் விளக்கம் அளித்தார். இந்த முறைகேட்டில் ஆதாயமடைந்த தனியார் நிறுவனங்கள் பற்றியும் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இதில் பிரபல தொழில் அதிபர் கே.எம். பிர்லா என்ற குமார் மங்கலம் பிர்லா மீது சி.பி.ஐ. நேற்று முதல் தகவல் அறிக்கை பதவு செய்தது. 

இதே போல் நிலக்கரி துறை முன்னாள் செயலாளர் பி.சி. பரேக் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. குமார் மங்கலம் பிர்லாவுக்கு சொந்தமான பிரிண்டல்கோ நிறுவனம் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு பெற்றுள்ளது. இந்த நிறுவனத்துக்கு 2005 ம் ஆண்டில் சுரங்கம் ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்துள்ளது. அந்நிறுவனம் செலுத்த வேண்டிய நிலுவை பாக்கி உள்ள நிலையில் நிலுவை இல்லாதவாறு கணக்குகளை காட்டியுள்ளதாக சி.பி.ஐ. தரப்பில் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த நிறுவனத்தின் அதிபர் 48 வயதான கே.எம். பிர்லா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

வழக்கு செய்யப்பட்டதை தொடர்ந்து மும்பை, கொல்கத்தா, ஐதராபாத்தில் உள்ள அவரது நிறுவனங்களில் சி.பி.ஐ. நேற்று அதிரடி சோதனை நடத்தியது. கே.எம். பிர்லா மீது மோசடி மற்றும் சதி திட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரிடம் விசாரணை நடத்தவும் சி.பி.ஐ. முடிவு செய்துள்ளது. இதற்காக அவருக்கு சி.பி.ஐ. விரைவில் சம்மன் அனுப்ப உள்ளது. நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்தினாலும் வழக்கு விவரங்களை சுப்ரீம் கோர்ட் கண்காணித்து வருகிறது. முறைகேடு நடந்த போது நிலக்கரி துறையை பிரதமர் மன்மோகன்சிங் கவனித்து வந்தார். இதனால் இந்த புகாரில் எதிர்க்கட்சிகள் பிரதமர் மன்மோகன்சிங் மீதும் நேரடியாக குற்றம் சாட்டி வந்தன. இந்த நிலையில் தொழில் அதிபர் கே.எம். பிர்லா மீதும் முன்னாள் செயலாளர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்